Published : 28 Jun 2024 10:48 AM
Last Updated : 28 Jun 2024 10:48 AM

“இந்த செட்-அப் எல்லாம் இந்திய அணிக்காகவே” - இங்கிலாந்து ஜாம்பவான்கள் தாக்கு | T20 WC

இந்திய அணி வீரர்கள்

மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் இத்தகையப் பிட்சில்தான் அரையிறுதி நடக்கப் போகிறது என்ற விவரம் இந்திய அணிக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டதா.

அதாவது இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதே அந்தத் தகவலின் அடிப்படையில்தானா? அதனால்தான் 4 ஸ்பின்னர்களை அணியில் தேர்வு செய்தனரா போன்ற கேள்விகளுடன் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிக்குள் நுழைந்த போட்டி குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி விவாத களத்தில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும்போது, கயானாவில் இத்தகைய பிட்சில்தான் ஆடப்போகிறோம் என்பது ரோகித்துக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது என்று தன் கருத்தை ஓப்பனாக முன்வைத்தார்.

உலகிலேயே பெரிய எண்ணிக்கையிலான இந்திய கிரிக்கெட் பார்வையாளர்களுக்கு உகந்த நேரம், ஒளிபரப்பாளர்களின் லாபம், ஸ்பான்சர்களின் லாப நோக்கு போன்றவை ஐசிசி போன்ற நடுநிலையுடன் செயல்பட வேண்டிய அமைப்பையே வர்த்தக ரீதியாகச் சிந்திக்க வைக்கிறது. பல வாரியங்களின் கூட்டமைப்பான ஐசிசி எப்படி ஒரு அணிக்குச் சாதகமாக செயல்பட முடியும்?

இருதரப்பு தொடர் என்றால் அந்தந்த உள்நாட்டு அணிகள் தங்களுக்குச் சாதகமான பிட்ச்களை அமைத்துக் கொள்ளலாம், போட்டியை நடத்தும் நாட்டின் கேப்டனுக்கு என்ன பிட்ச், எப்படி நடந்து கொள்ளும், ஸ்பின்னர்கள் அதிகம் தேவையா அல்லது வேகப்பந்து வீச்சு ஆட்டக்களமா போன்ற சாதக அம்சங்கள் முன்கூட்டியே தெரிய வரலாம். அதுவே சமநிலையை உடைப்பதாகும்.

இப்படியிருக்கும்போது உலகக் கோப்பைப் போன்ற பல நாடுகள் கலந்து கொள்ளும் குளோபல் நிகழ்வில் ஒரு அணிக்குச் சாதகமாக ஷெட்யூல் அமைப்பது, ஒரு அணிக்குச் சாதகமான அம்சங்களை முன்கூட்டியே அமைப்பது, அதை முன்கூட்டியே தெரிவிப்பது போன்றவற்றை ஐசிசி செய்யலாமா என்று இங்கிலாந்து தரப்பிலிருந்து முன்னாள் வீரர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு அரையிறுதிக்குப் போடப்பட்ட பிட்ச் குறித்து விமர்சனங்களை எழுப்பியபோது இக்காலத்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதாவது திறமையை வளர்த்துக் கொள்ள சம வாய்ப்பற்ற சூழ்நிலையில் ‘எந்தப் பிட்சிலும் ஆடும் திறமை’ வேண்டும் என்ற ரீதியில் விமர்சனங்களை அணுகும் ஒருதலைப்பட்சமான போக்கைத்தான் பார்க்க முடிந்தது.

அதே போல்தான் இந்திய டெலிவிஷன் பார்வையாளர்களையும் இதனால் ஒளிபரப்பு உரிமைகளை பெரிய தொகை கொடுத்து எடுத்துள்ள ஒளிபரப்பாளர்களின் லாபத்துக்காகவும் ஸ்பான்சர்களின் லாப வேட்டைக்காகவும் இந்திய அணிக்கு பகல் நேரப் போட்டியாகவே வைக்கப்பட்டதையும் மைக்கேல் வான் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் சுட்டிக் காட்டியுள்ளனர். இது போன்ற விமர்சனங்களை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்.

உடனே இந்திய அணி வென்றாலே இப்படிப் பேசுகிறார்கள் என்று ‘சப்ஜெக்டிவ்’ ஆக இதை அணுகக் கூடாது, இதில் உள்ள உண்மைகளை ஆராயும் தன்மையை வளர்த்துக் கொள்வதுதான் நல்லது. இங்கிலாந்து எப்படி இருந்தாலும் தோற்றுத்தான் போகும் என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் பிறகு ஏன் ஒரு அணிக்கு மட்டும் சாதக பலன்களை ஐசிசி அளிக்க வேண்டும் என்ற கேள்வி நியாயமாகி விடுமே.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுவது என்னவெனில், “நிச்சயமாக இந்திய அணிக்குச் சாதகமானதே. ரோகித் அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அவர் வெறும் சாதக நிலை என்ற தொனியில் கூறுகிறார். இந்தியாவின் பிரச்சினை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள்தான். மேலும், கயானாவில் இத்தகைய பிட்ச்சில்தான் ஆடப்போகிறோம் என்று தெரிந்திருக்கிறது. அதனால்தான் அணித்தேர்விலேயே அணியில் 4 ஸ்பின்னர்களை சேர்க்க முடிந்துள்ளது. இதுதான் காரணம்.

ஐசிசி தவறான வழியில் செல்கிறது. நான் ஒரு லட்சியவாத நிலையிலிருந்து பார்க்கிறேன். இந்த விளையாட்டில் மட்டும்தான் குதிரையைப் பின்னால் வைத்து வண்டியை முன்னால் வைக்கிறோம், அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றதை வரவேற்கிறோம், ஆனால் அங்குள்ள பிட்ச் உள்ளிட்ட நிலைமைகள் சரியானதா? விற்கும் பொருள் கிரிக்கெட் என்றால் அதன் தரநிலையை உயர்த்த வேண்டும். அனைவருக்கும் அந்தப் பொருள் மீதான சம வாய்ப்பை அளிக்க வேண்டும். அதன் பிறகு வர்த்தகப் பயன்களை நாட வேண்டும்.

சந்தைகள் இதைத்தான் கேட்கிறது என்று நாம் கூற முடியாது. கிரிக்கெட் முழுக்க முழுக்க கமர்ஷியல் கிடையாது. இது உலகக் கோப்பை. ஆகவே உயர்ந்த தரநிலையை எட்ட வேண்டும்” என்றார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

முன்னாள் இங்கிலாந்து அணியின் இடது கை தொடக்க வீரர் நிக் நைட், கூறும்போது, “இது சரியோ நியாயமோ அல்ல” என்றார். எங்கு விளையாடப் போகிறோம் என்பது இந்திய அணித்தேர்வுக்கு முன்னதாகவே தெரிந்திருக்கிறது என்ற சிந்தனைப் போக்கு மேலும் சில முன்னாள் வீரர்களிடமும் தோன்றியுள்ளது.

மைக்கேல் வான் கூறும்போது, “இந்த உலகக் கோப்பை இந்திய அணிக்கானது. இந்திய அணி அவர்கள் விருப்பப்படி எங்கு, எப்போது வேண்டுமானாலும் ஆடலாம். அவர்களது அரையிறுதி எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விடுகிறது. இந்திய அணிக்கு எல்லாமே பகல் போட்டிகள். ஏனெனில், அப்போதுதான் இந்திய ரசிகர்கள் இரவில் விஸ்ராந்தியாகப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க முடியும்.

எனக்குப் புரிகிறது. உலகக் கிரிக்கெட்டில் பணமே எல்லாமும். இருதரப்புத் தொடர்களிலும் இது நடக்கிறது. ஆனால் உலகக் கோப்பை போன்ற பொதுவான தொடர்களில் ஐசிசி அனைத்துத் தரப்பினருக்கும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியா பணத்தைக் கொண்டு வருகிறது என்பதற்காக அந்த அணிக்கு மட்டுமே ஐசிசி சாதகமாகச் செயல்படுவது கூடாது.

இருதரப்பு தொடர் என்றால் சரி புரிந்து கொள்கிறேன். ஆனால் உலகக் கோப்பை என்று வரும்போது ஒரு அணியின் மீது அதிக பாசமோ, பட்சபாத ஆதரவோ, சாதகமோ காட்டுவது சரியல்ல. இந்த உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவுக்காக செட்-அப் செய்யப்பட்ட தொடர் என்பதைத் தவிர வேறில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x