Published : 28 Jun 2024 07:45 AM
Last Updated : 28 Jun 2024 07:45 AM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா: மகளிர் டெஸ்ட் இன்று தொடக்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர். படங்கள்:எஸ்.சத்தியசீலன்

சென்னை: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் சென்னைசேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 4 நாட்கள் கொண்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்திய அணியில் உமா சேத்ரி, பிரியா பூனியா, சைகா இஷாக், அருந்ததி ரெட்டி, ஷப்னம் ஷகில் ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக இடம்பெற்றுள்ளனர். இதனால் இவர்கள் மீதுஎதிர்பார்ப்பு உள்ளது. இந்திய மகளிர் அணி கடைசியாக 2023-ம் ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தது. அதன் பின்னர் தற்போதுதான் இந்த வடிவில் களமிறங்குகிறது.

கடந்த ஆண்டில் சொந்த மண்ணில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணிவெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த வெற்றியை சேப்பாக்கத்திலும் தொடரச் செய்வதில் இந்திய வீராங்கனைகள் கவனம் செலுத்தக்கூடும். கடைசியாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் 2014-ம் ஆண்டு மைசூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தன. இந்த போட்டியில் இந்தியஅணி இன்னிங்ஸ் மற்றும் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமாரோட்ரிக்ஸ் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்களிடம் இருந்து மட்டை வீச்சில்உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும். இவர்களுடன் ஷபாலி வர்மா, தீப்தி சர்மா ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள். பந்துவீச்சை பொறுத்தவரையில் தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ஸ்னே ராணா ஆகியோர் தென் ஆப்பிரிக்க பேட்டிங் வரிசைக்கு கடும் சவால் அளிக்கக்கூடும்.

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி கடந்த இரு ஆண்டுகளில் ஒரே ஒரு டெஸ்ட்போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளது.உள்ளூர் மட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாத அந்தஅணியின் வீராங்கனைகள் நேரடியாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்கின்றனர். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் படுதோல்வியை சந்தித்துள்ள அந்த அணிக்கு சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளம் சவாலாக திகழக்கூடும்.

தென் ஆப்பிரிக்க அணியிலும் 5 பேர் அறிமுக வீராங்கனைகளாக இடம்பெற்றுள்ளனர். லாரா வோல்வார்ட் தலைமையிலான அந்த அணி ஆல்ரவுண்டர்களான சுனே லூஸ், டெல்மி டக்கர், டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோரை பெரிதும் நம்பி களமிறங்குகிறது. பந்து வீச்சை பொறுத்தவரையில் மசபாடா கிளாஸ், அன்னேக் போஷ், நோன்குலுலேகோ லபா ஆகியோர் விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்டவர்களாக திகழ்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 47 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. கடைசியாக இங்கு 1976-ம் ஆண்டு இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள்மகளிர் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றிருந்தது. இன்று காலை9.30 மணிக்கு தொடங்கும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை மைதானத்துக்கு நேரில் வந்து ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x