Published : 24 Jun 2024 11:03 AM
Last Updated : 24 Jun 2024 11:03 AM

அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி: மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தியது | T20 WC

தென் ஆப்பிரிக்க வீரர் ஷம்ஸி மற்றும் கேப்டன் மார்க்ரம்

ஆன்டிகுவா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-2 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளை டக்வொர்த் லூயிஸ் முறையில் 3 விக்கெட்டுகளில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளின் ஆன்டிகுவாவில் உள்ள மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச முடிவு செய்தது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு செல்லும் என்ற நிலை இருந்தது.

முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஸ்டன் சேஸ் 52 ரன்கள் எடுத்தார். மேயர்ஸ் 35 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்க அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை இந்தப் போட்டியில் பயன்படுத்தியது. மூவரும் தலா 4 ஓவர்கள் வீசினர். அதில் மார்க்ரம் மற்றும் மஹாராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஷம்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வேகப்பந்து வீச்சாளர்களான ரபாடா மற்றும் மார்க்கோ யான்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. இரண்டாவது ஓவரில் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டிகாக் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அவர்களை ரஸல் வெளியேற்றினார். 2 ஓவர்களில் 15 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது தென் ஆப்பிரிக்கா. அப்போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. 50 நிமிட தாமதத்துக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

மழை காரணமாக டக்வொர்த் லூயில் முறையில் 17 ஓவர்களில் 123 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுக்க வேண்டி இருந்தது. சீரான இடைவெளியில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். கேப்டன் மார்க்ரம் 18, கிளாசன் 22, மில்லர் 4, ஸ்டப்ஸ் 29, மஹாராஜ் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

யான்சன் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இறுதிவரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். 17-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி தனது அணியை அவர் வெற்றி பெற செய்தார். 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது அந்த அணி.

குரூப்-2 பிரிவில் இருந்து இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று இரவு 8 மணி அளவில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x