Published : 21 Jun 2024 02:57 PM
Last Updated : 21 Jun 2024 02:57 PM

சூர்யகுமார், பும்ராவினால் வெற்றி: ரோகித், கோலி என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

சூர்யகுமார், ரோகித், பும்ரா மற்றும் கோலி

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை ‘சூப்பர் 8’ போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற்றதற்கு பிரதான காரணம் இருவரே. அதாவது ஒருவர் சூர்யகுமார் யாதவ், மற்றொருவர் ஜஸ்பிரித் பும்ரா.

சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்களை விளாசினார். ரிஷப் பந்த் 20, ஹர்திக் பாண்டியா 32 என இந்திய அணி 181 ரன்களை எட்டியது. ஆனால், முதலில் ஃபரூக்கியிடம் ரோகித் சர்மா, 13 பந்துகளில் 8 ரன்கள் என்று அறுவையைப் போட்டுவிட்டு அவுட் ஆனார். கூடுதல் ஃபுல் லெந்த் பந்து வேகம் குறைக்கப்பட்ட பந்தை கொடியேற்றி வெளியேறினார். விராட் கோலியும் செம பிளேடு போட்டு 24 பந்துகளில் 24 ரன்களையே எடுத்து ரஷித் கானின் அற்புதமான பவுலிங்குக்கு ஆட்டமிழந்தார்.

பிரச்சினை என்னவெனில் ரோகித், கோலி என இரண்டு வயதான ஓப்பனர்களால் நல்ல வேகமான விரைவு தொடக்கத்தை கொடுக்க முடியவில்லை. திணறுகின்றனர். பவர் பிளேயில் இருவரும் திக்கு முக்காடி வருகின்றனர். இருவரது ஈகோவினால் ஒருத்தர் அணியில் இருந்தால் மற்றொருவரையும் அணியில் வைக்க வேண்டிய நிர்பந்தமும் வணிக ஸ்பான்ஸர்களின் நிர்பந்தமும் தான் இருவரையும் டி20 கிரிக்கெட்டில் இன்னமும் தக்க வைத்து வருகிறது. இதோடு அணித் தேர்வுக்குழுவுக்கு முதுகெலும்பு இல்லாத நிலை.

இவர்கள் இருவராலும் என்ன சிக்கல் என்றால், இவர்கள் ஸ்லோவாக தொடங்குவதால் 3-ம் நிலையில் இறங்கும் ரிஷப் பந்த் தொடங்கி சூர்யகுமார், ஷிவம் துபே, பாண்டியா ஆகியோர் மீது அழுத்தம் கூடுகிறது.

நேற்று அப்படித்தான் இருவரும் சொதப்பியதால் ரிஷப் பந்த், ரஷித் கான் பந்தில் ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்தது. நேராக ஸ்டம்புக்கு வரும் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடத் தேர்வு செய்தது ரிஷப் பந்த் தவறுதான். ஆனால், அந்தத் தவறுக்கு வயதான ஓப்பனர்களே காரணம்.

ஷிகர் தவானை என்ன சொல்லி கழற்றி விட்டனர். வயதாகி விட்டது, ஐ சைட் இல்லை, ரிப்ளெக்ஸ் இல்லை என்றுதானே? இவர்களிடம் என்ன இருக்கிறது? சூர்யகுமார் யாதவின் பேட்டிங், பும்ராவின் பவுலிங் இல்லையெனில் நேற்று வெற்றி சாத்தியமாகியிருக்காது.

ரோகித் சர்மா, விராட் கோலி என்ன செய்கின்றனர்? மணீஷ் பாண்டேக, மயங்க் அகர்வாலுக்கு ஒரு நீதி ரோகித், விராட் கோலிக்கு வேறொரு நீதியா?

ரோகித் சர்மா, விராட் கோலியை அணியில் தக்க வைக்க, பாவம் ரிங்கு சிங், ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் உள்ளிட்டோர் உலகக் கோப்பையில் ஆட முடியாமல் போயுள்ளது. இவர்கள் இருவரது சொதப்பலினால் பின்னால் வரும் அனைத்து வீரர்களுக்கும் பிரஷர் கூடுகிறது. இது போன்ற வெற்றிகளினால் இவர்களது ஆட்டம் நியாயப்படுத்தப்படுகிறது, அல்லது சொதப்பல் கண்டு கொள்ளாமல் விடப்படுகிறது.

ரோகித் சர்மாவின் கடைசி 10 அல்லது 12 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களை எடுத்துப் பார்த்தோமானால் ஆப்கானிஸ்தானுடன் 121 அடித்துள்ளார், இந்த உலகக் கோப்பையில் அயர்லாந்து அணியுடன் 52 எடுத்துள்ளார், இதற்கு முன்னும் பின்னும் அவரது ஸ்கோர் 15, 2, 15, 27, 0, 0, 13, 3, 8. இவர் அணிக்குத் தேவையா, கேப்டன்சி என்பது கொஞ்சம் டூ மச் இல்லையா? அதுவும் அடித்த ஸ்கோர்கள் எல்லாமும் கூட அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து என்று கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக.

விராட் கோலி கடைசி 6 சர்வதேசப் போட்டிகளில் 29, 0, 1, 4, 0, 24 என்று சொதப்பியுள்ளார். நியாயமாகப் பார்த்தால் அணியை விட்டுத் தூக்க வேண்டும். ஆனால், அவருக்கோ ஓப்பனர் என்ற புரமோஷன். தொடக்க வீரர், அதிரடி வீரரும், ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களிலும் டெஸ்ட், ஒருநாள் உள்ளிட்ட அனைத்திலும் பிரமாதமாக ஆடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். இது என்ன கந்தறுகோலம். ஏன் இதை யாரும் கேள்வி கேட்க மறுக்கின்றனர். மீடியா ஏன் ‘பார்ட்னர்’ ஆக இருக்க வேண்டும்?

இந்த அணியைக் கட்டிக்காக்கும் ராகுல் திராவிடுக்குப் பிறகு புதிய பயிற்சியாளரின் கீழ் புது ரத்தங்களுடன் புதிய அணியை இறக்கினால்தான் இந்திய டி20 கிரிக்கெட்டை இனி சுவாரஸ்யத்துடன் பார்க்க முடியும் என்பதே வல்லுநர்கள் பலரின் கருத்தாக உள்ளது. நடக்குமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x