Published : 20 Jun 2024 09:38 AM
Last Updated : 20 Jun 2024 09:38 AM

மேற்கு இந்தியத் தீவுகளை வென்ற இங்கிலாந்து: சால்ட், பேர்ஸ்டோ அசத்தல் | T20 WC

சால்ட் மற்றும் பேர்ஸ்டோ

செயின்ட் லூசியா: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் விளையாடின. இதில் 8 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து வீரர்கள் சால்ட் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பாக பேட் செய்து அசத்தினர்.

மேற்கு இந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சம்மி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.

பிராண்டன் கிங் 23, சார்லஸ் 28, பூரன் 36, பவல் 36, ருதர்ஃபோர்ட் 28 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து வீரர் ரஷீத், 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் பிலிப் சாலட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பேட் செய்ய வந்த மொயின் அலி 13 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜானி பேர்ஸ்டோ களத்துக்கு வந்தார். அதோடு ஆட்டத்தில் அதிரடி காட்டினார். அவரோடு சால்டும் இணைந்து மிரட்டினார்.

அதன் பலனாக 17.3 ஓவர்களில் இலக்கை கடந்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 26 பந்துகளில் 48 ரன்களுடனும், சால்ட் 47 பந்துகளில் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இங்கிலாந்து. அந்த அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவை ‘சூப்பர் 8’ சுற்றில் எதிர்கொள்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x