Published : 20 Jun 2024 08:35 AM
Last Updated : 20 Jun 2024 08:35 AM

ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்: இந்திய அணியில் குல்தீப்புக்கு வாய்ப்பு கிடைக்குமா? | T20 WC

பார்படாஸ்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூயார்க் ஆடுகளத்தில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. கனடா அணிக்கு எதிராக லாடர்கில் மைதானத்தில் விளையாட இருந்த கடைசி லீக் ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. லீக் சுற்றில் இந்திய அணி வேகப்பந்து வீச்சை பிரதானமாக கொண்டு வெற்றி பெற்றிருந்தது. இன்றைய போட்டி நடைபெறும் பார்படாஸ் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கக்கூடியது.

அதேவேளையில் தொடக்க ஓவர்களில் பந்துகள் நன்கு ஸ்விங் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கக்கூடும். இது நிகழும் பட்சத்தில் முகமது சிராஜ் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்படக்கூடும். அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், 35 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த ஷிவம் துபே, முதல் இரு ஆட்டங்களிலும் முறையே 36, 42 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த் ஆகியோர் மீண்டும் ஒரு முறை சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடும்.

மேலும் டாப் ஆர்டரில் விராட் கோலிபார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். லீக் சுற்றில் அவர், 3 ஆட்டங்களிலும் கூட்டாக 5 ரன்களே சேர்த்தார்.ரோஹித் சர்மாவும் நிலையான ஆட்டத்தைவெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். பந்து வீச்சில் சீரான திறனை வெளிப்படுத்தி வரும் ஹர்திக் பாண்டியா மட்டை வீச்சில் கவனம்செலுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளார். பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்களுடன் ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும்.

ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் உகாண்டா, நியூஸிலாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளைவீழ்த்தி சூப்பர் 8 சுற்றில் கால்பதித்தது. அதேவேளையில் கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. முதல் 3 ஆட்டங்களிலும் எதிரணியை 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சில் தடுமாறியது.

ரஷித் கான், நவீன் உல் ஹக், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். இடது கை வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கியும் 3 ஓவர்களை வீசி 38 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். நூர் அகமது, குல்பாதின் நயிப் ஆகியோர்மட்டுமே குறைந்த ரன்களை வழங்கியிருந்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சு திட்டங்களில் மாற்றங்கள் செய்யக்கூடும். பேட்டிங்கை பொறுத்தவரையில் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன், குல்பாதின் நயிப் ஆகியோர் டாப் ஆர்டரில் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். முகமது நபி, ரஷித் கான், ஹஸ்மதுல்லா ஓமர் ஸாய் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x