Published : 13 Jun 2024 02:55 PM
Last Updated : 13 Jun 2024 02:55 PM

கேன் வில்லியம்சனின் தப்புக் கணக்குகள்: நியூஸி. தோல்விக்கு காரணமான 2 ஓவர்கள்!

மேற்கு இந்திய தீவுகளின் தரவ்பாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை குரூப் சி போட்டியில் நியூஸிலாந்து அணி மேற்கு இந்திய தீவுகளிடம் தோற்று சூப்பர் 8 தகுதியை சிக்கலாக்கிக் கொண்டுள்ளது. தோல்விக்கு பிரதான காரணங்களாக கேன் வில்லியம்சன் கேப்டன்சியில் போட்ட தப்புக் கணக்குகளைச் சொல்லலாம்.

கடும் கனமழைக்குப் பிறகான ஒருமாதிரியான பிட்சில் டாஸ் வென்று பேட் செய்வதை விடுத்து மேற்கு இந்திய தீவுகளை முதலில் பேட் செய்ய அழைத்தது தவறாகிப் போனது. வெஸ்ட் இண்டீஸ் அணி நியூஸிலாந்தின் துல்லியமான பவுலிங்குக்கு எந்த ஒரு அடிப்படைப் புரிதலும் கால் நகர்த்தலும், தடுப்பாட்ட உத்தியும் இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக பேட் செய்து 7 ஓவர்களில் 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறியது. ஆனால் நின்று நிதானித்து பிறகு மட்டையைச் சுழற்றிய ருதர்போர்டு அபாரமான அரைசதத்தை எடுத்தார். கடைசி 2 ஓவர்களில் 37 ரன்களை விளாசினார். இதனால் இந்த கடினமானப் பிட்சில் நியூஸிலாந்து 150 ரன்களை இலக்காகப் பெற்றது.

கேன் வில்லியம்சன் செய்த இன்னொரு மகாபெரிய தவறு என்னவெனில் ட்ரெண்ட் போல்ட், டிம் சவுதி, லாக்கி பெர்குசன், ஜேம்ஸ் நீஷம் ஆகிய முன்னணி பவுலர்களின் 4 ஓவர்களை வீசச் செய்து பெரும் தவறிழைத்து விட்டார். 76/7 பிறகு 103/8 என்றவுடன் விரைவில் ஆல் அவுட் செய்துவிடலாம் என்று பிரதான பவுலர்களின் 4 ஓவர் கோட்டாவை முடித்துவிட்டது பெரும் தவறானது. 17.5 ஓவர்களில் 112/9 என்ற நிலையில் பவுலர்கள் இல்லாமல் டேரில் மிட்செலிடமும், சாண்ட்னரிடமும் கடைசி 2 ஓவர்களைக் கொடுக்க நேரிட்டது.

இரண்டு சிஎஸ்கே பவுலர்களும் வாரி வழங்கி விட்டனர். அதுவும் டேரில் மிட்செல் கடைசி ஓவரை வீச வல்லவர் அல்ல. இந்தப் பலவீனத்துக்காக காத்திருந்த ஷெர்ஃபானெ ருதர்ஃபோர்டு சரியாகப் பயன்படுத்திக் கொண்டு டேரில் மிட்செல் ஓவரில் மூன்று அருமையான சிக்சர்களை விளாசினார். கடைசி ஓவரை வீசிய மற்றொரு சிஎஸ்கே வீரரான சாண்ட்னரும் 20 ரன்களை வழங்கினார். 33 ரன்களில் ருதர்போர்ட் அரைசதம் விளாசினார்.

வெஸ்ட் இண்டீஸ் வின்னிங் டோட்டலான 149 ரன்களை எட்டியது. அனைத்து முன்னிலை பவுலர்களையும் ஓவர்களை அவசரம் அவசரமாக முடித்ததால்தான் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்றால் மிகையாகாது.

சேஸிங்கில் இன்னொரு சிஎஸ்கே வீரர் டெவன் கான்வே ஸ்வீப் ஆடப்போய் டாப் எட்ஜ் எடுத்து 5 ரன்களில் சொதப்பலாக வெளியேறினார். ஃபின் ஆலன் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் மிடில் அண்ட் ஆஃபில் மார்புயரம் வந்த பந்தை டீப் ஸ்கொயர் லெக்கில் ரஸல் கையில் கொடுத்து வெளியேறினார். கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் ஒருமுறை பின்னால் அருகில் கேட்ச் ஆகி 1 ரன்னில் வெளியேறினார். அன்று ரஷீத் கான் பந்தை ஸ்லிப் கையில் கேட்ச் பிராக்டீஸ் கொடுத்தார். இன்று மோட்டி என்ற ஸ்பின்னர் பந்தை நேராக விக்கெட் கீப்பர் பூரன் கையில் கொடுத்தார் வில்லியம்சன்.

பிறகு இதே மோட்டி இன்னொரு சிஎஸ்கே வீரரான ரச்சின் ரவீந்திராவையும் வீழ்த்தினார். டீப் மிட் விக்கெட்டில் ஆடிய லாஃப்டட் பிளிக் ஷாட்டை ரஸல் கேட்ச் ஆக்கினார். மற்றுமொரு சிஎஸ்கே வீரர் டேரில் மிட்செல் 12 ரன்கள் எடுத்து மோட்டியின் அற்புதமான ஸ்பின்னிற்கு ஸ்டம்புகளை இழந்தார். கிளென் பிலிப்ஸ் கொஞ்சம் அச்சுறுத்தினார். 33 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அல்ஜாரி ஜோசப் ஷார்ட் பிட்ச் பந்தில் வெளியேறினார். சாண்ட்னர் கடைசி ஓவரில் 3 சிக்சர்களை விளாசி 21 ரன்கள் எடுத்தாலும் இன்னும் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் 20 ஓவர்கள் முடிந்து விட்டது.

கடைசி 3 ஓவர்களில் 50 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற போதே நியூஸிலாந்து தோற்றுவிட்டது. இது ஐபிஎல் அல்ல. இதையெல்லாம் சேஸ் செய்வதற்கு, இது கடினமான பிட்ச் இங்கு இது சாத்தியமல்ல. 136/9 என்று முடிந்தது நியூஸிலாந்து. அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும் மோட்டி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் செர்பானே ருதர் போர்டு. கேன் வில்லியம்சனின் தவறான கணக்கீட்டினாலும் கேப்டன்சியினாலும் நியூஸிலாந்து சூப்பர் 8 தகுதியை இழந்து விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x