Published : 12 Jun 2024 10:20 PM
Last Updated : 12 Jun 2024 10:20 PM

அர்ஷ்தீப் சிங் அசத்தல்: 110 ரன்களில் சுருண்டது அமெரிக்கா | T20 WC

நியூயார்க்: டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்கா 110 ரன்களில் சுருண்டது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்க அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ஷயான் ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இறங்கினர். இதில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே ஷயான் ஜஹாங்கீர் அவுட் ஆனதால் அமெரிக்க அணி ஆடிப் போனது.

இதனையடுத்து இறங்கிய ஆண்ட்ரீஸ் கவுஸ், அதே ஓவரின் ஆறாவது பந்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இப்படியாக முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு நம்பிக்கை ஊட்டினார் அர்ஷ்தீப் சிங் .

அடுத்து இறங்கிய அணியின் கேப்டன் ஆரோன் ஜேம்ஸ் 22 ரன்களில் அனுப்பி வைத்தார் ஹர்திக் பாண்டியா. தொடர்ந்து ஸ்டீவன் டெய்லர் 24 ரன்கள், நிதிஷ் குமார் 27 ரன்கள், கோரி ஆண்டர்சன் 15 ரன்கள், ஹர்மீத் சிங் 10 ரன்கள், ஷேட்லி வான் ஷால்விக் 11 ரன்கள் என 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களில் அமெரிக்க அணி சுருண்டது.

மொத்தமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்கள், அக்சர் படேல் ஒரு விக்கெட் எடுத்திருந்தனர். தற்போது 111 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x