Published : 03 Aug 2014 02:07 PM
Last Updated : 03 Aug 2014 02:07 PM

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் தீபிகா, ஜோஷ்னா ஜோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவித் துள்ளார்.

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடந்த 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். பளு தூக்குதல் போட்டியில் 77 கிலோ பிரிவில் தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த வீரர் சதீஷ் தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு பாராட்டு தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, ரூ.50 லட்சம் பரிசும் அறிவித்தார். அதேபோல,டேபிள் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் சரத் கமல், அந்தோணி அமல்ராஜ் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை நடந்த ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தமிழக வீராங்கனைகள் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா இருவரும் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர். அவர்களுக்கு முதல்வர் ஜெய லலிதா பாராட்டு தெரிவித்துள்ள துடன், தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள் ளார்.

இதுதொடர்பாக தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா இருவருக்கும் முதல்வர் ஜெய லலிதா தனித்தனியாக அனுப்பி யுள்ள வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஸ்குவாஷ் போட்டியில் உங்களது திறமையான ஆட்டத் தின் மூலம் இந்திய அணிக்கு மற்றுமொரு வெற்றியை தேடிக் கொடுத்ததில் பெருமை அடைகி றேன். காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என எனக்கு தெரியவந்துள்ளது.

உங்களது வெற்றியின் மூலம் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ளீர்கள். அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக அணி வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று கடந்த 2011-ல் அறிவித்தேன். அதன்படி, உங்கள் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். எதிர்காலத்திலும் நீங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தர வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் ஜெய லலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x