Published : 03 Jun 2024 06:37 AM
Last Updated : 03 Jun 2024 06:37 AM

நார்வே செஸ் தொடரில் சாதனை: பிரக்ஞானந்தாவுக்கு ஸ்டாலின், அண்ணாமலை வாழ்த்து

சென்னை: நார்வே செஸ் தொடரில் சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா. மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மாக்னஸ் கார்ல்சனை வென்றதுடன், 5-ம் சுற்றில் தற்போது உலகின் 3-ம் நிலை வீரர் பேபியானோ கருணாவையும் ‘கிளாசிக்கல் செஸ்' வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பது மிகப்பெரும் சாதனையாகும்.

டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும் பிரக்ஞானந்தா. ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது.

அமைச்சர் உதயநிதி: நார்வே செஸ் போட்டியில், உலகின் முதல் நிலை வீரர் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய நிலையில், பேபியானோ கருணாவையும் வீழ்த்தி, டாப் 10-க்குள் வந்துள்ளதற்கு வாழ்த்துக்கள். உங்களது வெற்றியால் நாங்கள் பெருமையடைகிறோம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: உலகின் நம்பர் -1 வீரர் மாக்னஸ் கார்ல்சனை முதல்முறையாக வெற்றி பெற்றதுடன், கருணாவையும் வீழ்த்தி, உலகின் டாப்10 வரிசையில் இடம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துகள். சென்னையின் சாம்பியன் இந்தியாவை தொடர்ந்து பெருமையடைய செய்ய வேணடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x