Published : 01 Jun 2024 08:05 PM
Last Updated : 01 Jun 2024 08:05 PM

தினேஷ் கார்த்திக் ஓய்வு அறிவிப்பு: ரசிகர்களின் நன்மதிப்பைக் குறிப்பிட்டு நெகிழ்ச்சி!

புது டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த சில நாட்களாக நான் பெற்ற அன்பும் ஆதரவும் அளவிட முடியாதவை. இந்த உணர்வை ஏற்படுத்திய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும், அன்பும். அண்மைக் காலமாக நிறைய யோசித்து கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடலாம் என முடிவெடுத்துள்ளேன். தற்போது அதிகாரபூர்வமாக எனது ஓய்வை அறிவிக்கிறேன். தொடர்ந்து எனக்கு முன்னால் இருக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ள்ள காத்திருக்கிறேன்.

இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மில்லியன் கணக்கானோர் விளையாடும் இந்த நாட்டில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த கூடுதல் பாக்கியம்.

இத்தனை ஆண்டுகள் எனக்குத் துணையாகவும், தூணாகவும் இருந்தவர்கள் என்னுடைய பெற்றோர். அவர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. என்னுடைய இந்தப் பயணத்துக்காக தன்னுடைய தொழில்முறை விளையாட்டிலிருந்து வெளியேறி, எனக்காக துணை நின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.

விளையாட்டை பின்பற்றும் ரசிகர்களுக்கும், ஃபாலோவர்ஸ்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ஆதரவில்லாமல் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட்டும், நிலைத்திருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

மூன்று ஃபார்மெட்டுகளையும் சேர்த்தும் மொத்தம் 180 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 3463 ரன்களைச் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x