Published : 27 May 2024 07:41 PM
Last Updated : 27 May 2024 07:41 PM

“நம்மைப் பற்றியே பேச்சு!” - சன்ரைசர்ஸ் அணி ட்ரெஸ்ஸிங் ரூமில் காவ்யா மாறன் பெருமிதம்

சென்னை: “டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தையே நீங்கள் மாற்றிவிட்டீர்கள். கேகேஆர் வெற்றி பெற்றாலும், அனைவரும் நம்மைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்களுக்கு அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஹைதராபாத் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கைதட்டியபடியே, மைதானத்தில் கண்ணீருடன் வலம் வந்த காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த வீடியோ வைரலானது.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணி வீரர்கள் குழுமியிருந்த ட்ரெஸ்ஸிங் அறைக்குச் சென்ற காவ்யா மாறன், அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தும் வீடியோவை அந்த அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ட்ரெஸ்ஸிங் அறையில் வீரர்களிடம் பேசும் காவ்யா மாறன், “நீங்கள் அனைவரும் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். அதை கூறவே இங்கு வந்தேன்.

டி20 கிரிக்கெட்டை விளையாடும் விதத்தையே நீங்கள் மாற்றிவிட்டீர்கள். அனைவரும் நம்மைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டீர்கள். அனைவருக்கும் நன்றி. கடந்த ஆண்டு நாம் கடைசி இடத்தை பிடித்திருந்தாலும், இந்த முறை உங்களின் திறமையால் முன்னேறி வந்துள்ளோம். அதற்கு ரசிகர்களின் ஆதரவும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

கொல்கத்தா அணி வெற்றி பெற்றபோதிலும், எல்லோரும் நம்மைப் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், நாம் விளையாடிய கிரிக்கெட்டைப் பற்றி இன்னும் பேசுவார்கள் என்று நம்புகிறேன். நாம் இறுதிப் போட்டியில் விளையாடியிருக்கிறோம். மற்ற அணிகள் நாம் விளையாடுவதை பார்த்துகொண்டிருந்தனர். உங்கள் அனைவருக்கும் நன்றி” என பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x