Published : 22 May 2024 09:35 PM
Last Updated : 22 May 2024 09:35 PM

சரிந்த ஆர்சிபி டாப் ஆர்டர்: ராஜஸ்தானுக்கு 173 ரன்கள் இலக்கு @ ஐபிஎல் 

விராட் கோலி

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிராக 8 விக்கெட்டுகளை இழந்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 172 ரன்களைச் சேர்த்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் களமிறங்கினர்.

5ஆவது ஓவரில் டு பிளெஸ்ஸிஸ் 17 ரன்களில் வெளியேறினார். 8ஆவது ஓவரில் 33 ரன்களுக்கு கோலியும் விக்கெட்டாக 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 76 ரன்களைச் சேர்த்தது. அடுத்து கேமரூன் கிரீன் - ரஜத் படிதார் கைகோத்து ஆட்டத்தை நகர்த்திச் சென்றனர். 13ஆவது ஓவரில் கேமரூன் 27 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் அதே ஓவரில் டக்அவுட்டானார்.

ரஜத் படிதாரும் நிலைக்காமல் 34 ரன்களில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் மஹிபால் லோமரோர் - தினேஷ் கார்த்திக் நிதானமாக விளையாடிக்கொண்டிருக்க, அவர்களின் நிதானத்தை களைத்தார் ஆவேஷ் கான். அவர் வீசிய 19-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 11 ரன்களிலும், மஹிபால் 32 ரன்களிலும் கிளம்பினர்.

கடைசி ஓவரின் கடைசி பந்தில் கரண் சர்மா 5 ரன்னுக்கு அவுட்டாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 172 ரன்களைச் சேர்த்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ்கான் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், சாஹல், சந்தீப் சர்மா, டிரன்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

எலிமினேட்டர்: இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். அதேவேளையில் வெற்றி பெறும் அணி வரும் 24-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x