Published : 07 Apr 2024 09:09 PM
Last Updated : 07 Apr 2024 09:09 PM
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லி அணிக்கு எதிராக 29 ரன்களில் மும்பை வெற்றி பெற்றது. இந்நிலையில், வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது.
“நாங்கள் இந்த சீசனில் எங்கள் அணியின் ஆடும் 12 வீரர்களை சில வியூகங்களின் அடிப்படையில் அமைத்து வந்தோம். சரியான நேரத்தில் எங்கள் அணியை செட்டில் செய்வது மிகவும் அவசியமானதாக இருந்தது. அந்த வகையில் இதுவே எங்களது ஆடும் 12 வீரர்கள் அடங்கிய அணியாக இருக்கும் என நம்புகிறேன். மனதளவில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டி இருந்தது. எங்களுக்குள் அன்பும், ஆதரவும் அதிகம் உள்ளது. அதை டிரஸ்ஸிங் ரூமில் பரஸ்பரம் பார்க்க முடிகிறது.
எங்களுக்குள் நம்பிக்கை இருந்தது. மீண்டெழ ஒரே ஒரு வெற்றி தேவை என அனைவரும் நம்பினோம். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. 6 ஓவர்களில் 70+ ரன்களை எடுத்தோம். வாய்ப்பு கிடைத்த போது அனைவரும் ரன் எடுத்ததும் வரவேற்கதக்கது. ரொமாரியோ ஷெப்பர்ட் துவம்சம் செய்து விட்டார். அவர் தான் எங்களுக்கு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
டெல்லிக்கும் எங்களுக்கும் இடையிலான ரன் வித்தியாசம் அவர் குவித்த அந்த ரன்கள் தான். நான் சரியான நேரத்தில் பந்து வீசுவேன். இன்றைய போட்டியில் அதற்கான தேவை எழவில்லை” என தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்றில் மும்பை அணிக்கு எதிராக 200+ ரன்கள் என்ற இலக்கை எந்தவொரு அணியும் கடந்தது இல்லை. அது இந்தப் போட்டியிலும் தொடர்கதையாகி உள்ளது. மும்பை அணி முதலில் பேட் செய்து இதுவரை 14 முறை 200+ ரன்கள் குவித்துள்ளது. அந்த அனைத்திலும் மும்பை அணியே வாகை சூடியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்த வீரர்களில் பட்டியலில் ரோகித் இணைந்துள்ளார். அதே போல பும்ரா, மும்பை அணிக்காக 150 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். கடைசி 5 ஓவர்களில் 96 ரன்களை குவித்தது மும்பை அணி. இது அனைத்தும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை மற்றும் அந்த அணியின் வீரர்கள் படைத்த சாதனைகளாக உள்ளது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பும்ராவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment