Published : 21 Mar 2024 04:18 PM
Last Updated : 21 Mar 2024 04:18 PM

சிஎஸ்கே புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - தோனியின் புதிய ரோல் என்ன?

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணி சார்பில் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கலந்துகொண்ட நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் நிர்வாகம் ஐபிஎல் கோப்பை உடன் அணிகளின் கேப்டன்கள் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளது. அதில், 9 கேப்டன்கள் உடன் பஞ்சாப் அணியின் துணை கேப்டன் ஜிதேஷ் ஷர்மா என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் சென்னை அணி சார்பில் தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார்.

தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்று குறிப்பிட்டே ருதுராஜ் கெய்க்வாட்டை ஐபிஎல் நிர்வாகம் அடுத்த பதிவை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவி வருகிறது. இந்தப் பதிவுக்கு கீழ், 'அப்படியெனில் தோனியின் ரோல் என்ன?' என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சில தினங்கள் முன் எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய ரோலில் களம் காண உள்ளதாக மகேந்திர சிங் தோனி ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அப்போதே கேப்டன் பதவியை தோனி துறக்க போகிறாரா என்ற பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், எதற்கும் விடை கிடைக்கவில்லை. சில தினங்கள் முன் சென்னை வந்த தோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அணியில் முக்கிய வீரராக மட்டுமே அவர் செயல்படுவார் எனத் தெரிகிறது.

சிஎஸ்கே அதிகாரபூர்வ அறிவிப்பு: ஐபிஎல் 2024 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்துள்ளார். ருதுராஜ் 2019 முதல் சென்னை சூப்பர் கிங்ஸின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறார். மேலும் ஐபிஎல்லில் 52 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 2022-ல் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். ஜடேஜா அணியை வழிநடத்திய நிலையில் மீண்டும் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் சென்னை அணியின் அடுத்த கேப்டன் என்ற பேச்சுகளுக்கு மத்தியில் ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக ஆகியுள்ளார்.

ஐபிஎல் 2024 சீஸன் நாளை தொடங்குகிறது. சென்னை - ஆர்சிபி அணிகளுக்கு இடையே முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x