Published : 28 Jan 2024 05:42 AM
Last Updated : 28 Jan 2024 05:42 AM

ஆலி போப் 148* ரன்கள் விளாசல்: இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை

ஆலி போப்

ஹைதராபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்தது. தொடக்கவீரரான ஆலி போப் 148 ரன்கள் விளாசினார். அவரது அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணி2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 110 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 421 ரன்கள்எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80, ஷுப்மன் கில் 23 ஸ்ரேயஸ் ஐயர் 35, கே.எல்.ராகுல் 86, கர் 41 ரன்கள் சேர்த்தனர்.

ரவீந்திர ஜடேஜா 81, அக்சர் படேல் 35 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 15 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 3 விக்கெட்களையும் இழந்தது. ரவீந்திர ஜடேஜா 180 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அக்சர் படேல் 100 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ரெஹான் அகமது பந்தில் போல்டானார். ஜஸ்பிரீத் பும்ரா ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஜோ ரூட் பந்தில் வெளியேறினார்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 4 விக்கெட்களையும் டாம் ஹார்ட்லி, ரெஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 77 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர்களான ஸாக் கிராவ்லி31 ரன்களில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஆலி போப் இந்திய பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார். மறுமுனையில் சீராக ரன்கள் சேர்த்த பென் டக்கட் 52 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 2 ரன்னில் பும்ரா பந்தில் வெளியேறினார்.

தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோ 10 ரன்னில்ஜடேஜா பந்திலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்னில் அஸ்வின் பந்திலும், பென் ஃபோக்ஸ் 34 ரன்களில் அக்சர் படேல்பந்திலும் போல்டானார்கள். ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தாலும் மட்டையை சுழற்றிய ஆலி போப் தனது 5-வது சதத்தை விளாசினார். அபாரமாக விளையாடிய அவர், 208 பந்துகளில், 17 பவுண்டரிகளுடன் 148 ரன்களும்,ரெஹான் அகமது 16 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x