Published : 10 Jan 2024 06:31 AM
Last Updated : 10 Jan 2024 06:31 AM

முகமது ஷமி, வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு அர்ஜுனா விருது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி: விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் வீரர்கள், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான மேஜர் தயான் சந்த் விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது. இந்த வகையில் 2023-ம் ஆண்டு விருதுக்கான பட்டியல் கடந்த டிசம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்றது. விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு பாட்மிண்டன் வீரர்களான ஷிராக் ஷெட்டி, சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் பாட்மிண்டன் தொடரில் பங்ககேற்றுள்ளதால் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

ஷிராக் ஷெட்டி, சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி ஜோடியானது கடந்த ஆண்டில் ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தது. ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் 1,000 ஆயிரம் புள்ளிகள் கொண்ட இந்தோனேஷியா ஓபன் தொடரிலும் இந்த ஜோடி வாகை சூடியிருந்தது.

அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 26 பேரில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஈஷா சிங் மட்டும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கவில்லை. தற்போது அவர், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்றில் பங்கேற்றுள்ளார். இதனால் அவரை தவிர்த்து மற்ற 25 பேரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவிக்கு அர்ஜுனா விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கிய போது அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது. சக்கர நாற்காலி பாரா படகு வலித்தல் வீராங்கனையான பிராச்சி யாதவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விழா மேடையில் இருந்து நடந்து வந்து, பிராச்சி யாதவ் அமர்ந்திருந்த இடத்துக்கே சென்று விருது வழங்கி கவுரவித்தார். பிராச்சி யாதவ், ஹாங்சோவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இவர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி, ஸ்குவாஷ் வீரரான ஹரிந்தர் பால் சிங் சாந்து ஆகியோரும் அர்ஜுனா விருது பெற்றார்கள். 33 வயதான முகமது ஷமி, கடந்த நவம்பர் மாதம் முடிவடைந்த ஐசிசி உலகக்கோப்பை தொடரில் 24 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார்.

தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார். இதன் மூலம் கோனேரு ஹம்பி, துரோணவல்லி ஹரிகா ஆகியோருக்கு பிறகு கிராண்ட் மாஸ்டம் பெற்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்தார். வைஷாலி, இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் சாந்து, அர்ஜுனா விருதைபெறும் 11-வது ஸ்குவாஷ் வீரர் ஆவார்.

துரோணாச்சார்யா விருது தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான ஆர்.பி.ரமேஷுக்கு வழங்கப்பட்டது. ஆர்.பி.ரமேஷ், பிரக்ஞானந்தாவை சிறந்த வீரராகஉருவாக்கியதில் முக்கிய பங்குவகித்தவர் ஆவார். அதேவேளையில் துரோணாச்சார்யா விருது வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கவிதா செல்வராஜ் (கபடி) விருது பெற்றார்.

கேல் ரத்னா விருது வென்றவர்களுக்கு ரூ.25 லட்சமும், அர்ஜுனா விருது, துரோணாச்சார்யா விருது வென்றவர்களுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் வழக்கமாக ஆகஸ்ட் 29 அன்றுதான் விருது வழங்கும் விழா நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டுசெப்டம்பர் 23 முதல் அக்டோபர்8 வரை ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

விருது வென்றவர்கள் விவரம்

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது: ஷிராக் ஷெட்டி, சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி (பாட்மிண்டன்),

அர்ஜூனா விருது: ஓஜாஸ் பிரவீன் தியோடலே (வில்வித்தை), அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை), முரளி ஸ்ரீசங்கர் (தடகளம்),பாருல் சவுத்ரி (தடகளம்), முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை), ஆர்.வைஷாலி (செஸ்), முகமது ஷமி (கிரிக்கெட்), அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்), திவ்யகிருதி சிங் (குதிரையேற்றம்), திக் ஷா தாகர் (கோல்ப்), கிருஷ்ணன் பகதூர் பதக் (ஹாக்கி), சுசீலா ஷானு (ஹாக்கி), பவன் குமார் (கபடி), ரித்து நெகி (கபடி), நஸ் ரீன் (கோ-கோ), பிங்கி (லான் பவுல்ஸ்), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சுடுதல்), ஈஷா சிங் (துப்பாக்கி சுடுதல்), ஹரிந்தர் பால் சிங் சாந்து (ஸ்குவாஷ்), அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சுனில் குமார் (மல்யுத்தம்), அன்டிம் (மல்யுத்தம்), நவோரெம் ரோஷிபினா தேவி (வுஷூ), ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை), இல்லூரி அஜய்குமார் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்), பிராச்சி யாதவ் (பாரா கனோயிங்).

துரோணாச்சார்யா விருது: லலித்குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (செஸ்), மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), சிவேந்திர சிங் (ஹாக்கி), கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகம்ப்).

துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனையாளர் பிரிவு): ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்), பாஸ்கரன் (கபடி), ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்).

வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது: மஞ்சுஷா கன்வர் (பாட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x