Published : 08 Jan 2024 07:00 AM
Last Updated : 08 Jan 2024 07:00 AM

“ஒரு டெஸ்ட் அணியாக இந்திய அணி சிறந்த வெற்றிகளை குவித்து வருகிறது” - மைக்கேல் வாகனின் கருத்துக்கு அஸ்வின் பதிலடி

ரவிச்சந்திரன் அஸ்வின்

புதுடெல்லி: ஒரு டெஸ்ட் அணியாக இந்திய அணி மிகச்சிறந்த வெற்றிகளை பெற்று வருகிறது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். இந்திய அணியை மோசமாக விமர்சனம் செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக அஸ்வின் பேசியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியது இந்திய அணி. ஆனால், இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி அமையவில்லை. இந்திய அணி முதல் டெஸ்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

ஏராளமான திறமைகள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் குறைந்த வெற்றிகளை பெறும் அணியாக இந்தியா இருக்கிறது. சமீபத்திய காலங்களில் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளில் அதிகம் வெற்றி பெறவில்லை. அவர்கள் வெற்றிகளைப் பெற்று மேலே வர தவறுகின்றனர். திறமைகள் அனைத்தையும் கொண்டுள்ள அவர்கள் இன்னும் அதிகமாக சாதித்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் மைக்கேல் வாகனின் இந்தக் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மைக்கேல் வாகனின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அஸ்வின் கூறியுள்ளதாவது: பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி, ஐசிசி கோப்பையை வென்றதில்லை. இது உண்மைதான். விளையாட்டின் பவர் ஹவுஸ் என்று இந்தியாவை நாம் குறிப்பிடுகிறோம்.

விளையாட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், வெளிநாடுகளில் இந்திய அணி வியக்கத்தக்க வகையில் செயல்பட்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. நல்ல மன உறுதியும், மனத்திறனும் கொண்ட ஒரு நல்ல கிரிக்கெட் அணி எங்கிருந்தும் மீண்டும் களமிறங்க முடியும் என்பதுதான் உண்மை. நாங்கள் இருஉலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் தோற்றோம். நான் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

மைக்கேல் வாகன் அப்படி கருத்து தெரிவித்த பின்னர், இந்தியா குறைந்த வெற்றிகளை பெறும் அணியாக இருக்கிறதா என்பதை பற்றி எங்களுடைய நாட்டிலேயே நிறைய வல்லுநர்கள் பேசத் துவங்கியுள்ளனர்.

ஐசிசி கோப்பைகளை வெல்லாவிட்டாலும் கடந்த 10 வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் வெளிநாடுகளில் இந்தியா அதிக வெற்றிகளை குவித்துள்ளது. ஒரு டெஸ்ட் அணியாக இந்திய அணி மிகச்சிறந்த வெற்றிகளை பெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் தொடரை சமன் செய்தும், வென்றும் இருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட் என்பது சின்னசின்ன தவறுகளால் மாற்றமடைந்துவிடும். எவ்வளவு பெரிய தோல்விகளில் இருந்தும், இந்திய அணியால் மீண்டு வந்து வெற்றியைத் தர முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.

2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப்டவுன் ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தது. இதற்கு ஷுப்மன் கில் ஆட்டமிழந்ததே சாட்சி. இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x