Published : 03 Jan 2024 05:50 PM
Last Updated : 03 Jan 2024 05:50 PM

“பிரிஜ் பூஷன் ஆட்கள் மிரட்டுகின்றனர்... சஞ்சய் சிங் இல்லாத கூட்டமைப்பை ஏற்கிறோம்” - சாக்‌ஷி மாலிக்

சாக்‌ஷி மாலிக்

புதுடெல்லி: “பாஜக எம்.பி.யும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் குண்டர்கள் ஆக்டிவாக இருக்கின்றனர். எனது தாய்க்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தல்கள் வருகிறது. பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் இல்லாத இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நாங்கள் ஏற்கிறோம். மற்ற உறுப்பினர்கள் இருப்பதில் எங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை” என சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஒரு வருடத்துக்கு முன்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னணி வீரர்களான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சிங் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட வீரர்கள் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதே வேளையில், இந்தக் கூட்டமைப்பை தற்காலிகக் குழு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சாக்‌ஷி மாலிக், “பாஜக எம்.பி.யும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் குண்டர்கள் ஆக்டிவாக இருக்கின்றனர். எனது தாய்க்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தல்கள் வருகின்றன. எனது குடும்பத்தில் உள்ள ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டுகிறார்கள்.

பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் இல்லாத இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நாங்கள் ஏற்கிறோம். மற்ற உறுப்பினர்கள் இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சமூக ஊடகங்களில் உள்ளவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள், ஆனால் அவர்கள் வீட்டிலும் சகோதரிகள் மற்றும் மகள்கள் இருப்பதை மறந்துவிடக் கூடாது.

மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளில் சஞ்சய் சிங் தலையிடாதவாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உறுதி செய்ய வேண்டும். கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், எனது குடும்பத்தை குறிவைக்கிறார். எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என்று சாக்‌ஷி மாலிக் தெரிவித்தார்.

தனக்கு எதிரான இளம் வீரர்களின் போராட்டம் குறித்து தொடர்ந்து பேசிய சாக்‌ஷி, “மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்குப் பிறகு பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் அதிகார துஷ்பிரயோகத்தை அனைவரும் பார்த்தனர். இளம் மல்யுத்த வீராங்கனைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். எங்களால் எந்த இளம் மல்யுத்த வீரரும் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நான் 18-20 வருடங்களாக மல்யுத்த விளையாட்டு போட்டிகளில் இருக்கிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும்” என்றார்.

தற்போது இந்திய மல்யுத்த கள நிலவரத்தில் புதிய திருப்பமாக, ‘முன்னணி வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் எங்களின் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர்’ என்று கூறி, அவர்களுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம் > சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு எதிராக டெல்லியில் இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x