Published : 03 Jan 2024 03:50 PM
Last Updated : 03 Jan 2024 03:50 PM

SA vs IND | தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்: இன்னிங்ஸை விரைந்து ‘முடித்த’ சிராஜ், பும்ரா, முகேஷ்!

கேப்டவுன்: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டியுள்ளனர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள். அபாரமாக பந்துவீசிய இந்திய வீரர் மொகமது சிராஜ் 6 விக்கெட் எடுத்தார்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளும் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்று கேப்டவுன் நகரில் தொடங்கியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகேஷ் குமாரும் சேர்க்கப்பட்டனர். அதன்படி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா அணி. குறிப்பாக மொகமது சிராஜின் வேகப் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்டர்கள் நிலைகுலைந்தனர்.

இன்னிங்ஸின் 3.2வது ஓவரில் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், 5.3வது ஓவரில் டீன் எல்கரை போல்ட் செய்து வெளியேற்றினார். பும்ரா தன் பங்கிற்கு டிரிஸ்டன் ஸ்டப்ஸை விக்கெட்டை எடுத்தார். ஆனால் சிராஜ் விடுவதாக இல்லை. தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா பேட்டர்களை அட்டாக் செய்தார்.

பும்ரா விக்கெட் வீழ்த்திய அடுத்த ஓவரிலேயே டோனி ஜோர்ஜி அவுட் ஆக்கி ஷாக் கொடுத்தார். தொடர்ந்து கைல் வெர்ரைன் உடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற டேவிட் பெடிங்காமை 12 ரன்களுக்கும், கடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு தலைவலியாக இருந்த மார்கோ யான்சனையும் பூஜ்ஜியத்திலும், கைல் வெர்ரைனை 15 ரன்களுக்கும் நடையை கட்ட வைத்து 6 விக்கெட்கள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணியை தடுமாற வைத்தார் சிராஜ்.

இதனால், தென் ஆப்பிரிக்க அணி 45 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. 9 ஓவர்களை மட்டும் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார் சிராஜ். இதன்பின் பந்துவீச வந்த முகேஷ் குமார் தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். 3 ரன்கள் எடுத்திருந்த கேசவ் மகராஜ்ஜை முகேஷ் குமார் ஆட்டமிழக்க செய்ய, நந்த்ரே பர்கரை பும்ரா கவனித்து கொண்டார். நந்த்ரே 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டாக ரபாடாவின் விக்கெட்டை முகேஷ் குமார் வீழ்த்தினார். இதனால் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது தென் ஆப்பிரிக்க அணி. மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 23.2 ஓவர்களை மட்டுமே சந்தித்தது.

இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இன்றைக்கு பந்துவீசினர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முன் தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய தரப்பில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசினர். இதில் பிரசித் கிருஷ்ணா மட்டும் விக்கெட் வீழ்த்தவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x