Published : 03 Jan 2024 03:16 PM
Last Updated : 03 Jan 2024 03:16 PM
கேப்டவுன்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறி வருகிறது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது அந்த அணி.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளும் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்று கேப்டவுன் நகரில் தொடங்கியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகேஷ் குமாரும் சேர்க்கப்பட்டனர். அதன்படி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா அணி. குறிப்பாக மொகமது சிராஜின் வேகப் பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்டர்கள் நிலைகுலைந்தனர்.
இன்னிங்ஸின் 3.2வது ஓவரில் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், 5.3வது ஓவரில் டீன் எல்கரை போல்ட் செய்து வெளியேற்றினார். பும்ரா தன் பங்கிற்கு டிரிஸ்டன் ஸ்டப்ஸை விக்கெட்டை எடுத்தார். ஆனால் சிராஜ் விடுவதாக இல்லை. தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா பேட்டர்களை அட்டாக் செய்தார். பும்ரா விக்கெட் வீழ்த்திய அடுத்த ஓவரிலேயே டோனி ஜோர்ஜி அவுட் ஆக்கி ஷாக் கொடுத்தார்.
தொடர்ந்து கைல் வெர்ரைன் உடன் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற டேவிட் பெடிங்காமை 12 ரன்களுக்கும், கடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு தலைவலியாக இருந்த மார்கோ யான்சனையும் பூஜ்ஜியத்திலும், கைல் வெர்ரைனை 15 ரன்களுக்கும் நடையை கட்ட வைத்து 6 விக்கெட்கள் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணியை தடுமாற வைத்தார் சிராஜ். இதனால், தென் ஆப்பிரிக்க அணி 46 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது. 9 ஓவர்களை மட்டும் வீசி 6 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார் சிராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment