Published : 03 Jan 2024 03:14 PM
Last Updated : 03 Jan 2024 03:14 PM

சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு எதிராக டெல்லியில் இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் மல்யுத்த வீரர்கள்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கள நிலவரத்தில் புதிய திருப்பமாக, ‘முன்னணி வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் எங்களின் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர்’ என்று கூறி, அவர்களுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப் பிரதேசம், ஹரியாணா, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளில் இளம் மல்லயுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தருக்கு வந்திறங்கினர். அவர்கள் வருவது குறித்து தகவல் அறியாத போலீஸார், வீரர்கள் மைதானத்துக்குள் நுழைவதை தடுப்பதற்கு முன்பாக, மைதானத்துக்குள் நுழைந்த இளம் வீரர்கள் அனைவரும் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாக்பத்திலுள்ள சப்ராலியின் ஆர்ய சமாஜ் அகாராவில் இருந்து வந்தவர்கள். மேலும், பலர் நரேலாவில் உள்ள விரேந்தர் மல்யுத்த அகாதமியில் இருந்தும் வந்திருந்தனர். மற்றவர்கள் போராட்டத்தில் இணைந்து கொள்வதற்காக பேருந்துகளில் காத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளம் வீரர்கள் கைகளில், ‘சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பே... எங்களை இந்த மூன்று வீரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்’ வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர்.

முன்னதாக, கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன்பாக இதே ஜந்தர் மந்தர் மைதானத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அப்பேதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னணி வீரர்களான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள், சமூக ஆர்வலரகள், அரசியல்வாதிகள், மகளிர் அமைப்பினர், சக மல்யுத்த வீரர்கள் என சமூகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவளித்தனர்.

இந்த நிலையில், இம்மூன்று மல்யுத்த சாம்பியன்களும் தங்களின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறி, அவர்களுக்கு எதிராக இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இப்போது ஈடுபட்டுள்ளனர். ஜந்தர் மந்திரில் புதன்கிழமை போராட்டம் நடத்தி வரும் வீரர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகித்து வரும் தற்காலிகக் குழுவை கலைத்துவிட்டு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்திருக்கும் கூட்டமைப்பு நிர்வாக அமைப்பை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டதாலும், கூட்டமைப்பை தற்காலிகக் குழு நிர்வகித்து வருவதாலும் கடந்த 2023 ஜனவரியிலிருந்து தேசிய சாம்பியன்கள் மற்றும் பிற போட்டிகள் எதுவும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x