Published : 22 Dec 2023 05:56 PM
Last Updated : 22 Dec 2023 05:56 PM

“பிரதமரே... நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன்; பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கிறேன்” - பஜ்ரங் புனியா

புதுடெல்லி: பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விவகாரத்தில் இந்த முடிவை எடுத்துள்ள அவர், “என்னை இனி மல்யுத்தக் களத்தில் பார்க்க மாட்டீர்கள்” என்றும் கூறினார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்கும் முடிவை எடுத்துள்ளார் பஜ்ரங் புனியா. எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தை வெளியிட்டுள்ள பஜ்ரங் புனியா, "அன்புள்ள பிரதமரே, நீங்கள் நன்றாக செயல்படுகிறீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் நாட்டுக்காக வேலை செய்வதில் பிஸியாக இருப்பீர்கள். என்றாலும் மல்யுத்த வீரர்களின் விஷயத்தில் உங்களின் கவனத்தை பெற முயல்கிறேன்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நமது மல்யுத்த வீராங்கனைகள் பிரிஷ் பூஷன் சிங் மீது பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தை தொடங்கியது நீங்கள் அறிந்திருப்பீர்கள். நானும் அவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டேன். அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது. இதன்பின் மூன்று மாதங்கள் ஆனபோதும் பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் மீண்டும் ஏப்ரல் மாதம் வீதிக்கு வந்து போராடினோம். அப்போதும் பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. அதன் பலனாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஜனவரியில் அவருக்கு 19 புகார்தாரர்கள் இருந்தனர். ஆனால், ஏப்ரல் மாதத்துக்குள் அந்த எண்ணிக்கை 7 ஆக குறைந்தது. இதன் பொருள் பிரிஜ் பூஷன் 12 மல்யுத்த வீராங்கனைகளிடம் தனது செல்வாக்கை காண்பித்து மிரட்டியுள்ளார் என்பதே. எங்களின் போராட்டம் 40 நாட்கள் நீடித்த சமயத்தில் மேலும் ஒரு வீராங்கனை போராட்டத்தில் இருந்து பின்வாங்கினார்.

அந்தத் தருணத்தில் எங்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. எங்கள் போராட்ட தளம் இடிக்கப்பட்டது. நாங்கள் டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம். எனவே, நாங்கள் எங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீச முடிவெடுத்தோம். நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம். ஆனால், ஆனால் பிரிஜ் பூஷன் போன்ற ஒரு நபரின் தொழில் பார்ட்னரும், அவரின் நெருங்கிய உதவியாளர்தான் தற்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்வால் நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன். இன்று முதல் நீங்கள் என்னை மல்யுத்த களத்தில் பார்க்க மாட்டீர்கள். எனது பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கிறேன்" என்று பஜ்ரங் புனியா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, “மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷணின் உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பெண் வீராங்கனைகள் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்கு உள்ளாவார்கள்” என்று முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், சாக்‌ஷிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஜேந்தர் சிங், “ஒரு விளையாட்டு வீரராக சாக்‌ஷி மாலிக்கின் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மல்யுத்த போட்டிகளில் தங்கம் வென்ற அந்த வீராங்கனை வேண்டியது எல்லாம் நீதி மட்டுமே. ஆனால், அது அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால், வேதனை அடைந்த அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால், உலக அளவில் இந்தியாவின் பிம்பம் உயருமா, குறையுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். வாசிக்க > “பெற்றோர் இனி பிள்ளைகளை விளையாட அனுப்புவார்களா?” - சாக்‌ஷி விலகலால் விஜேந்தர் சிங் வேதனை

பின்புலம் என்ன? - பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனைகளான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக முன்னணி வீரரான பஜ்ரங் பூனியாவும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர், பதவியை இழந்தார்.

இந்தப் போராட்டத்தின் போது பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என சாக்‌ஷிஉ மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், பிரிஜ் பூஷண் சரண் சிங் ஆதரவாளரான சஞ்ஜய் சிங் புதிய தலைவராக தேர்வாகி உள்ளது போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 15 நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

‘மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்’ - இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக சஞ்ஜய் சிங் தேர்வாகி உள்ள நிலையில், சாக்‌ஷி மாலிக் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், கண்ணீர் மல்க கூறும்போது, “நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷனின் வணிக கூட்டாளியும் அவரது நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் தலைவராக தேர்வாகி உள்ளார். இதனால் நான், மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். நாங்கள், ஒரு பெண் தலைவராக வரவேண்டும் என விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x