Published : 12 Dec 2023 07:26 AM
Last Updated : 12 Dec 2023 07:26 AM

விஜய் ஹசாரே கோப்பை | பாபா இந்திரஜித் 103* ரன்கள் விளாசல்: அரை இறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு

பாபா இந்திரஜித்

ராஜ்கோட்: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 48.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிரசாத் பவார் 58 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்தார். ஷிவம் துபே 45, ஜெய் பிஷ்தா 37, ஷம்ஸ்முலானி 27, ஹர்திக் தாமோர் 24 ரன்கள் சேர்த்தனர். பந்து வீச்சில் தமிழ்நாடு அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, சாய்கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் மணிமாறன் சித்தார்த், பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

228 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழ்நாடு 43.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 98 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 103 ரன்களும், விஜய் சங்கர் 58 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக பாபா அபராஜித் 45, நாராயண் ஜெகதீசன் 27, நிதிஷ் ராஜகோபால் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகனாக பாபாஇந்திரஜித் தேர்வானார். அரை இறுதியில் தமிழ்நாடு அணி நாளை (13-ம் தேதி) ஹரியாணாவுடன் மோதுகிறது. பிற்பகல் 1.30மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x