Published : 29 Nov 2023 06:14 AM
Last Updated : 29 Nov 2023 06:14 AM

13-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: பஞ்சாப் அணி 4-வது முறையாக சாம்பியன்

சென்னை: 13-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பஞ்சாப் அணி. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தியது.

ஆடவருக்கான 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

தமிழ்நாடு அணி சார்பில் 4-வது நிமிடத்தில் சோமன்னா, 40-வது நிமிடத்தில் சுந்தரபாண்டி, 52-வது நிமிடத்தில் கார்த்தி செல்வம் ஆகியோர் கோல் அடித்தனர். கர்நாடகா தரப்பில் கவுடா சேஷே (12-வது நிமிடம்), ஹரிஷ் முத்தகர் (34-வது நிமிடம்), முகமது ரஹீல் மவுசீன் (38-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

இதைத் தொடர்ந்து வெற்றி யாளரை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில்தமிழ்நாடு 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் ஜோஸ்சுவா பெனடிக்ட் வெஸ்லி, கனகராஜ் செல்வராஜ், தனுஷ், சுந்தரபாண்டி, ஷியாம் குமார் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர்.

கர்நாடக அணியில் மகேஷ் மாஜி அடித்த முதல் ஷாட்டை தமிழ்நாடு அணியின் கோல்கீப்பர் செந்தமிழ் அரசு தடுத்தார். கவுடா சேஷே, ஹரிஷ் முத்தகர், அபரன் சுதேவ் ஆகியோர் தங்களது வாய்ப்புகளை கோலாக மாற்றினர். 3-வது இடம் பிடித்த தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹரியாணா - பஞ்சாப் அணிகள் மோதின. 13-வது நிமிடத்தில் பஞ்சாப் அணி வீரர் ஹர்ஜீத் சிங் பீல்டு கோல் அடித்தார். இதனால் பஞ்சாப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 25-வது நிமிடத்தில் ஹரியாணா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சஞ்ஜய் கோலாக மாற்ற முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது.

42-வது நிமிடத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடிக்க அந்த அணி 2-1 எனமுன்னிலை பெற்றது. ஆனால் அடுத்த 8-வது நிமிடத்தில் ஹரியாணா பதிலடி கொடுத்தது. ரஜந்த் அடித்த பீல்டு கோல் காரணமாக ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது. இதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. நிர்ணயிக்கப் பட்ட 60 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது.

இதனால் வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பஞ்சாப் அணி 9-8 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் அந்த அணி பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும். பட்டம் வென்ற அந்த அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற ஹரியாணா வெள்ளிப் பதக்கம் பெற்றது. பரிசளிப்பு விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பஞ்சாப் அணிக்கு பதக்கங்கள் அணிவித்தார்.

நிகழ்ச்சியில் ஹாக்கி இந்தியா துணைத் தலைவர் போலோ நாத், ஹாக்கி இந்தியா பொருளாளர் மற்றும் தமிழ்நாடு ஹாக்கியின் தலைவர் சேகர் ஜே.மனோகரன், அப்துல்லா எம்.பி., பரந்தாமன் எம்.எல்.ஏ., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x