Published : 26 Nov 2023 09:26 PM
Last Updated : 26 Nov 2023 09:26 PM

IND vs AUS 2-வது டி20 | ஆஸி.க்கு 236 ரன்கள் இலக்கு: ஜெய்ஸ்வால், ருதுராஜ், கிஷன், ரிங்கு மிரட்டல்

இஷான் கிஷன் | கோப்புப்படம்

திருவனந்தபுரம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 235 ரன்கள் குவித்துள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணி இலக்கை விரட்டி வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷன் என இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூவரும் அரை சதம் கடந்தனர். வழக்கம் போல ரிங்கு சிங் ஃபினிஷிங் டச் கொடுத்தார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் ஆகியோர் அடுத்தடுத்து அரை சதம் பதிவு செய்தனர். பவர்பிளே ஓவர்கள் முடிவில் 77 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஜெய்ஸ்வால், 25 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் மற்றும் கெய்க்வாட் இணைந்து 87 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிஷன், 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ருதுராஜ். ரிங்கு சிங், 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து மிரட்டினார்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்தனர். 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x