Published : 15 Nov 2023 10:29 PM
Last Updated : 15 Nov 2023 10:29 PM

ODI WC 2023 | நியூஸி.யை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா: ஷமி அசத்தல் பந்துவீச்சு!

விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் ஷமி

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 70 ரன்களில் வென்றது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. ரோகித், கில், கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக பேட் செய்தனர். பந்து வீச்சில் ஷமி சிறப்பாக செயல்பட்டார். மொத்தமாக 7 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார்.

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நியூஸிலாந்து சேஸ் செய்தது. அந்த அணிக்காக கான்வே மற்றும் ரச்சின் ரவவீந்திரா தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இருவரும் ஷமி வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

மூன்றாவது விக்கெட்டுக்கு வில்லியம்சன் மற்றும் மிட்செல் இணைந்தனர். இருவரும் இணைந்து 181 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது இந்திய அணிக்கு சோதனையாக அமைந்தது. சுழற்பந்து வீச்சை இருவரும் சிறப்பாக எதிர்கொண்டனர். இருவரும் ஒவ்வொரு ஓவரிலும் நியூஸிலாந்து அணிக்கு பவுண்டரி தேவைப்பட்டது.

வில்லியம்சன், 69 ரன்களில் ஆட்டமிழந்தார். நெருக்கடியான தருணத்தில் இந்தியாவுக்கு தேவைப்பட்ட அந்த பார்ட்னர்ஷிப்பை தகர்த்தார் ஷமி. அதே ஓவரில் டாம் லேதம் விக்கெட்டையும் கைப்பற்றினார். கிளென் பிலிப்ஸ் உடன் இணைந்து 75 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் மிட்செல். பிலிப்ஸ், 41 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மார்க் சேப்மேன் 2 ரன்களில் வெளியேறினார்.

119 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து இந்தியாவை அச்சுறுத்திய மிட்செல் ஆட்டமிழந்தார். 9 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். அவரது விக்கெட்டையும் ஷமி கைப்பற்றினார். ஓவர்களில் விக்கெட்கள் இழப்புக்கு ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது நியூஸிலாந்து. இந்திய அணி சார்பில் ஷமி 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். பும்ரா, குல்தீப் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

இந்தியா இன்னிங்ஸ்: ரோகித் - ஷுப்மன் கில் கூட்டணி இந்திய அணியின் இன்னிங்ஸை ஓப்பன் செய்தது. போல்ட்டின் முதல் பந்தே 2 ரன்கள் விளாசிய ரோகித், முதல் ஓவரில் மட்டும் இரண்டு பவுண்டரிகளுடன் 10 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புல் ஷாட் சிக்ஸர்கள் , பவுண்டரிகள் என அதிரடி காட்டிய ரோகித் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 47 ரன்கள் குவித்தது.

விரைவாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9வது ஓவரில் டிம் சவுதியின் பந்துவீச்சில் 47 ரன்களுக்கு விக்கெட்டானார். இதையடுத்து, விராட் கோலி களம்புகுந்தார். ரோகித் சென்ற பின் ஷுப்மன் கில் மட்டையை சுழற்றினார். இதனால், 12.2 ஓவர்களில் ஷுப்மன் கில் சிக்ஸர் அடிக்க இந்திய அணி 100 ரன்களை எட்டியது. இதற்கு அடுத்த ஓவரில் ஷுப்மன் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கில்லின் 13வது ஒருநாள் அரைசதம் இதுவாகும்.

தொடர்ந்து இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 79 ரன்கள் எடுத்திருந்தபோது ஷுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டார். அவரை அணியின் பிசியோ சோதித்து பார்த்தார். பின்னர் ரிட்டையர் ஹர்ட் முறையில் விளையாடாமல் பெவிலியன் திரும்பினார் கில். அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார்.

சச்சின் சாதனை முறியடிப்பு: கில் சென்ற பிறகு விராட் கோலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். 60 பந்துகளை சந்தித்த கோலி, 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 29வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. தொடர்ந்து கோலியுடன் ஸ்ரேயஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் 7 ரன் ரேட் என்பதை குறையாமல் பார்த்துக்கொண்டனர். ஸ்ரேயஸ் அரைசதம் பதிவு செய்தார்.

அதேநேரம், சதத்தை நோக்கி முன்னேறிய விராட் எதிர்பார்த்தபடி, வரலாற்று சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்து 50வது சதம் அடித்தார் விராட் கோலி. 106 பந்துகளை சந்தித்த கோலி, 8 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இதன்பின் 117 ரன்களில் டிம் சவுதியின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.

கோலியின் விக்கெட்டுக்கு பின் ஸ்ரேயஸ் ஆட்டத்தை கவனித்துக்கொண்டார். அவரும் சில நிமிடங்களில் சதம் அடித்து அசத்தினார். 67 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் ஸ்ரேயஸ் சதம் பதிவுசெய்த நிலையில் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து திரும்பினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணிக்கு 398 என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் 39 ரன்களும், ரிடையர் ஹர்ட் ஆகி திரும்ப வந்த ஷுப்மன் கில் 80 ரன்கள் எடுத்தும் இறுதி ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட் வீழ்த்தினார்.

நாக் அவுட் வரலாறு: கடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்து விதித்த சிறிய இலக்கை இந்திய அணி விரட்ட முடியாமல் போய் தோல்வி கண்டது. அனைத்து வடிவங்களிலும் நியூஸிலாந்து இதுவரை இந்திய அணியை 4 நாக் அவுட் போட்டிகளிலும் வென்றுள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் வென்று வரலாற்றை மாற்ற இந்திய அணி கடுமையாக போராடியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x