Published : 09 Nov 2023 07:59 AM
Last Updated : 09 Nov 2023 07:59 AM

‘3 அணிகள், 3 போட்டி, ஒரு இடம்’: அரை இறுதியில் இந்தியாவுடன் மோதுவது யார்?

இந்திய அணி வீரர்கள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் ஏற்கெனவேஅரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் தற்போது 3-வது அணியாக ஆஸ்திரேலியாவும் நுழைந்துள்ளது. 14 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்யும். தலா 12 புள்ளிகளை பெற்றுள்ளதென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு தலா ஒரு லீக் ஆட்டம் எஞ்சியுள்ளது.

போட்டி அட்டவணையின் படி லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணி 4-வது இடத்தை பிடிக்கும் அணியை அரை இறுதி சுற்றில் எதிர்கொள்ளும். மற்றொரு அரை இறுதியில் லீக் சுற்றில் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பலப்பரீட்சை நடத்தும். இந்த வகையில் 2-வது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுவது உறுதியாகி உள்ளது. ஏனெனில் கடைசியாக அரை இறுதி சுற்றுக்குள் நுழையும் அணியால் இந்த இரு அணிகளின் புள்ளிகளை நெருங்க முடியாது.

2-வது அரை இறுதியில் மோதும் அணிகள் தெரிந்துவிட்ட நிலையில் முதல் அரை இறுதியில் இந்தியாவுடன் எந்த அணி விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அரை இறுதி சுற்றில் கடைசி அணியாக தகுதி பெறுவதற்கு நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. இதில் இருந்து ஒரு அணிதான் அரை இறுதி சுற்றில் இந்தியாவை சந்திக்கும்.

நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுமே தலா 8 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் வித்தியாசப்படுகின்றன. இவர்களில் அதிக ரன் ரேட்டை (0.398) கொண்டுள்ள நியூஸிலாந்து அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில், தடுமாறி வரும் இலங்கையுடன் மோதுகிறது. கடந்து ஆண்டு உலகக் கோப்பையில் 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதுடன் நிகர ரன் ரேட்டை கணிசமாக உயர்த்திக் கொள்ளவும் வேண்டும். அதேவேளையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்க வேண்டும். இது நிகழ்ந்தால் நியூஸிலாந்து அணி அரை இறுதி சுற்றில் கால்பதிப்பதில் பிரச்சினை இருக்காது.

இந்தியா - பாகிஸ்தான்? அரை இறுதி சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இது நிகழ வேண்டுமானால் 0.036 நிகர ரன் ரேட்டை வைத்துள்ள பாகிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டும். இந்த ஆட்டம் வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணிக்கு சாதகமான விஷயம் என்ன வென்றால் நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களை முடித்த பிறகுதான் தனது கடைசி ஆட்டத்தை சந்திக்கிறது.

இதனால் எவ்வளவு நிகர ரன் ரேட் தேவை என்பதை பாகிஸ்தான் அணி அறிந்துகொள்ள முடியும்.-0.038 நிகர ரன் ரேட்டை கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (10-ம் தேதி) தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவதுடன் நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளைவிட அதிக நெட் ரன் ரேட்டை பெற வேண்டும்.

நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளுமே தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் தோல்விகளை தழுவினாலும் அப்போதும் நிகர ரன் ரேட் தான் அரை இறுதிக்குள் நுழையும் கடைசி அணியை முடிவு செய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x