Published : 04 Nov 2023 11:03 AM
Last Updated : 04 Nov 2023 11:03 AM

ஒரு லட்சம் ரன்கள் எடுத்தாலும் பலவீனம் இல்லாத பேட்டர்கள் இருக்க முடியாது: கோலி குறித்து ஷோயப் மாலிக்

ஷோயப் மாலிக்

கராச்சி: விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்டர், அவரிடமும் பலவீனம் உள்ளது என்று பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் கூறியதையடுத்து ஷோயப் மாலிக் கோலி ரசிகர்கள் படையின் சமூக ஊடகக் கேலிப்பொருளாகி வறுத்து எடுக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக விராட் கோலி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி கட்டுரை வெளியிட்டதற்காக இந்தி நாளிதழ் ஒன்று எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஷோயப் மாலிக் சர்ச்சைக்குரிய விதத்தில் எதுவும் கூறிவிடவில்லை. விராட் கோலி ஸ்பின் ஆடுவதில் அவரிடம் உள்ள உத்தி ரீதியான பலவீனம் பற்றியே ‘குழு விவாதம்’ ஒன்றில் தன் கருத்தை முன் வைத்தார். கோலி மட்டுமல்ல பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்களுக்கும் இத்தகைய பலவீனம் உண்டு என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கோபாவேசமடைந்த கோலி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் ஷோயப் மாலிக் மீது தம் கோபதாபங்களையும் வசைகளையும் கேலி, கிண்டல்களையும் வெளிப்படுத்தினர். அதில் ஒருவர் குறிப்பாக, ‘விராட் கோலிக்கு பேட்டிங் சொல்லிக் கொடுத்து விட்டாய் அடுத்து அமிதாப் பச்சனுக்கு நடிப்பு சொல்லித்தா..’ என்ற ரீதியில் கிண்டல் செய்திருந்தார்.

இதைக் குறிப்பிட்டு ஷோயப் மாலிக்கிடம் ரியாக்‌ஷன் கேட்ட போது முதலில் இந்தக் கருத்த்துக்கு அவர் உடனே சிரித்திருக்கிறார். பிறகு அவர் பதிலளிக்கையில், “ஒரு லட்சம் ரன்களை எடுத்திருந்தாலும் பலவீனம் எதுவுமே இல்லாத ஒரு வீரர் கூட உலகில் இல்லை” என்று பதிலளித்தார்.

‘தி பெவிலியன்’ என்ற கிரிக்கெட் நுணுக்கங்கள் பற்றிய அந்த குழு விவாதத்தில் வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக், ஆகியோர் கோலி ஏன் ஸ்பின் பந்துக்கு எதிராக திணறுகிறார் என்பதை அவரது கால் நகர்த்தலில் உள்ள கோளாறுகளை வைத்து விவாதம் நடைபெற்றது. அதில் ஷோயப் மாலிக், “கோலி, பாபர் அசாமின் வலது கால் ஸ்பின்னர் வீசும் போது முன்னால் குறுக்காக கொண்டு வரப்பட்டு ஆடுகின்றனர்.

இது பந்து உள்ளே வரும்போது அவர்களுக்கு பெரும் பிரச்சனைகளைக் கொடுக்கிறது. நான் அவருக்கு அதை ஆடத்தெரியவில்லை என்று கூறவில்லை, மாறாக அவர் கொஞ்சம் திணறுகிறார் என்பதைத்தான் கூறுகிறேன். இந்த ஒட்டுமொத்த ஷோ-வையும் ஒழுங்காகப் பார்த்தால் கோலியை நான் எவ்வளவு புகழ்ந்திருக்கிறேன் என்பதும் ‘உலகின் கிரேட்களில் அவர் ஒரு வீரர்’ என்று கூறியிருக்கின்றேன்.

ஆஃப் ஸ்பின்னரை ஆடும்போது கோலி, பாபர் அசாம் கொஞ்சம் தடுமாறுவது அவர்கள் முன் காலை குறுக்காகக் கொண்டு வந்து ஆடுவதுதான். விராட் கோலி இந்த நெருக்கடியை ஆக்ரோஷமாக ஆடுவதன் மூலம் களைந்து கொள்கிறார், ஆனால் பாபர் அசாம் அப்படிச் செய்வதில்லை. அப்படி ஆக்ரோஷமாக பாபர் ஆடும்போது அவரும் இந்த சிக்கலிலிருந்து விடுபட வாய்ப்பு கிடைக்கும்” என்றார் ஷோயப் மாலிக்.

ஒரு வீரராக இன்னொரு வீரரின் பலவீனங்களைச் சுட்டுவதும் அதை அந்த குறிப்பிட்ட வீரருமே கேட்டுக் கொள்வதும், அதன் படி நடப்பதும் கிரிக்கெட் உலகின் மிக சகஜமான விஷயம், சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் கிரிப் இப்படி இருந்தால் டென்னிஸ் எல்போ வராது என்று சச்சின் தங்கும் 5 நட்சத்திர விடுதியில் வேலை செய்பவர் ஒருவர் கூறியதை சச்சின் டெண்டுல்கரே விதந்தோதி அவர் கூறியதை அங்கீகரித்து மாற்றிக் கொண்டதை சச்சின் டெண்டுல்கரே கூறியுள்ளார். அதே போல்தான் விராட் கோலியும் டெக்னிக்கலாக யார் எதைக்கூறினாலும் அதைச் சீர்தூக்கிப் பார்த்து மாற்றிக் கொள்ள முயற்சி செய்பவர்தான். ஆனால் நாயக வழிபாட்டுக் கூட்டம் கறைபடியாத வீரர், தவறுகளே இல்லாத வீரர் என்பதைக் கற்பனையாகக் கட்டமைத்துக் கொண்டு சரியான விமர்சனங்களை வைப்பவர்களையும் வசைமாரியில் இறங்குவது ஆரோக்கியமான பண்பாடல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x