Published : 03 Nov 2023 04:22 PM
Last Updated : 03 Nov 2023 04:22 PM
மும்பை: “எனக்கு ஷார்ட் பால் ஆடத் தெரியாது எனக் கூறுகிறீர்களா?” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஆவேசமாக பேசினார்.
இலங்கைக்கு எதிரான போட்டிக்குப் பின்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரேயஸ் ஐயரிடம் பத்திரிகையாளர் ஒருவர் ஷார்ட் பால் குறித்து கேள்வி எழுப்பினார். அதில், "இந்த உலகக் கோப்பையில் ஷார்ட் பிட்ச் பந்துகள் உங்களுக்கு பிரச்சினையாக இருந்துள்ளது. ஆனால், இன்று சிறப்பாக புல் ஷாட் அடித்தீர்கள். தென் ஆப்பிரிக்கா போட்டிக்கு எப்படி தயாராகியிருக்கிறீர்கள். அந்த அணியினர் ஷார்ட் பிட்ச் பந்துகளை சிறப்பாகவும் அதிகமாகவும் வீசுவார்களே?" என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியை கேட்டவுடன் அதிருப்தியை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர், "நீங்கள் ஷார்ட் பால் எனக்கு பிரச்சினை எனச் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார்.
பதிலுக்கு, "பிரச்சினை என்கிற ரீதியில் சொல்லவில்லை. இந்தத் தொடரில் அந்த வகையான பந்துவீச்சு உங்களை தொந்தரவு செய்துள்ளதே. அதைத்தான் கேட்டேன்" என அந்த பத்திரிகையாளர் மீண்டும் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு நீண்ட விளக்கம் கொடுத்தார் ஸ்ரேயஸ். அந்த விளக்கத்தில், "ஷார்ட் பால்கள் என்னை தடுமாற செய்கிறதா... இன்றைய போட்டியில் நான் அடித்த புல் ஷாட்டை பார்த்தீர்களா? குறிப்பாக ஒரு பவுண்டரி அடித்தேன், அதை கவனித்தீர்களா? ஒரு பந்தை எதிர்கொள்ளும்போது, அதை அடிக்க முயலும்போது, அதில் விக்கெட்டாகவும் வாய்ப்பு இருக்கிறது. அது ஷார்ட் பால் அல்லது புல் லெந்த் என எந்த மாதிரியான பந்துவீச்சானாலும் சரி.
இன்ஸ்விங்கரில் இரண்டு மூன்று முறை போல்டானால், உடனே எனக்கு இன்ஸ்விங்கே ஆடத் தெரியாது எனக் கூறுவீர்கள். களத்தில் விளையாடும் வீரர்களாகிய நாங்கள் எந்த மாதிரியான பந்திலும் அவுட் ஆகலாம். ஆனால், வெளியில் இருக்கும் நீங்கள் வீரர்களை பற்றி இந்த மாதிரியான கற்பிதங்களை உருவாக்குகிறீர்கள். மும்பையில் இருந்து கிரிக்கெட் விளையாட்டுக்குள் வந்தவன் நான். வான்கடே மைதானத்தில் அதிகமாக விளையாடியிருக்கிறேன்.
மற்ற மைதானங்களை விட, வான்கடே அதிகமாக பவுன்ஸ் வகை பந்துகளுக்கு ஒத்துழைக்கும். இந்த மைதானத்தில் அதிகம் விளையாடியவன் என்ற முறையில், ஷார்ட் பிட்ச் பந்துகளை எப்படி ஆட வேண்டும் என்பது எனக்கு தெரியும். பொதுவாக ஒரு ஷாட்டை ஆட முற்படும்போது சில சமயங்களில் அது சரியாக அமையலாம். சில சமயங்களில் அப்படி அமையாகாமலும் போகலாம். ஒருவேளை நான் பல சமயங்களில் ஷார்ட் பிட்ச் பந்துகளை விளையாடும்போது அது சரியாக அமையவில்லை என்பதால் எனக்கு அதில் பிரச்சினை இருப்பதாக உங்களுக்கு தோன்றியிருக்கலாம். ஆனால், ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இது என் மனதுக்கு தெரியும்" எனக் கோபமாக பதிலளித்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment