Published : 31 Oct 2023 07:49 PM
Last Updated : 31 Oct 2023 07:49 PM

ஈடன் கார்டன் சர்ப்ரைஸ் - கோலி பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடும் பெங்கால் வாரியம்!

கொல்கத்தா: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் 35-வது பிறந்தநாளை பிரமாண்ட முறையில் கொண்டாட திட்டமிட்டுவருகிறது பெங்கால் கிரிக்கெட் வாரியம்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பை போட்டி வரும் நவம்பர் 5ம்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் 35வது பிறந்தநாள். இந்திய அணியின் ரன் மெஷின் நடப்பு உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதையடுத்து அவரின் பிறந்தநாளை பிரமாண்ட முறையில் கொண்டாட திட்டமிட்டுவருகிறது பெங்கால் கிரிக்கெட் வாரியம்.

அதனொரு பகுதியாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அன்றைய தினம் போட்டியைக் காண வரும் 70,000 ரசிகர்களுக்கு கோலியின் உருவம் பதிந்த முகமூடியை இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளது பெங்கால் கிரிக்கெட் வாரியம். அந்த முகமூடியை அணிந்துகொண்டு கோலியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"விராட் கோலி பேட்டிங் செய்யவரும்போது அவரின் முகமூடியை ரசிகர்கள் அணியும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மிகப்பெரிய அளவில் பிறந்தநாள் கேக் வெட்டும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் ஐசிசியின் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஐசிசியின் அனுமதி கிடைக்கும்பட்சத்தில் கோலிக்கு மறக்க முடியாத பிறந்தநாளாக அன்றைய நாளை மாற்றுவோம்" என பெங்கால் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x