Published : 24 Oct 2023 02:42 PM
Last Updated : 24 Oct 2023 02:42 PM

ODI WC 2023 | ’என் நெஞ்சில் உதிரம் கொட்டுகிறது’ - ஷோயப் அக்தர்; ’கிலோ கணக்கில் இறைச்சியை உண்கிறார்கள்’: வாசிம் அக்ரம் காட்டம்

உலகக் கோப்பை ஆட்டத்தில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் ஆப்கான் அணி முதல் முறையாக பாகிஸ்தானை ஒருநாள் போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்தது. ஒரு அணி தோற்கலாம் ஆனால் இப்படியா தோற்பது என்ற ரீதியில் பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்கள் கடுமையாக எழுந்து வருகின்றன.

283 ரன்கள் இலக்கை ஆப்கானிஸ்தான் அணி அற்புதமாக ஆடி 8 விக்கெட்டுகள் மீதியில் வெற்றிகரமாக துரத்தியது. மறுபுறம், நடந்துகொண்டிருக்கும் போட்டியில் பாகிஸ்தானுக்கு இது மூன்றாவது தொடர்ச்சியான தோல்வியாகும், இது அவர்களின் முதல் நான்கு இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து ஹோயப் அக்தர், வாசிம் அக்ரம் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

ஷோயப் அக்தர்: இந்த ஆட்டத்தைப் பற்றி என்னதான் சொல்வது. சரியான இடத்தில் சரியான நபரை நிறுத்த முதலில் பழகுங்கள். யார் வேண்டுமானாலும் பாகிஸ்தான் வாரிய சேர்மனாகலாம். எத்தனை நாட்களுக்குத்தான் சாமானியங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது. சராசரியான ஆட்களை மேல் பதவியில் நியமிக்கிறீர்கள், ஆட்டமும் சராசரியாகவே இருக்கும்.

இன்று தொலைக்காட்சியில் நாம் பார்த்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருக்கும் நிலையின் பிரதிபலிப்பு. கிரிக்கெட்டில் 20-30 ஆண்டுகளாக உங்கள் தெரிவுகளின் விளைவே இன்றைய கிரிக்கெட். இந்த முடிவைத்தான் நீங்கள் கொண்டு வந்துள்ளீர்கள்.

இந்த அணியில் உற்சாகமான, தூண்டுகோலான வீரர் ஒருவரேனும் இருக்கிறாரா? நான் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றோரை பார்த்திருக்கிறேன், கூட ஆடியிருக்கிறேன். இம்ரான் கான், ஸ்டீவ் வாஹ், விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற லெஜண்ட்களையும் பார்த்திருக்கிறேன். இப்போது இருக்கும் இந்த பாகிஸ்தான் அணியில் இளைஞர்களைத் தூண்டும் கிரிக்கெட்டுக்கு கொண்டு வரும் ஊக்கமிகு தூண்டுதல் கொண்ட வீரர் யாராவது இருக்கிறார்களா?

எங்கள் வீடியோக்களை பார்ப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஒரு தலைமுறையையே நாங்கள் ஊக்குவித்தோம். நான் பாகிஸ்தானுக்கு ஆடியிருக்கிறேன், என் இருதயத்தில் ரத்தம் வடிகிறது. நான் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பேன். நான் பாபர் அசாமுக்கு சொல்வதெல்லாம் கேப்டனாக இன்னும் கொஞ்சம் ஆட்டத்திறனைக் கூட்டு, அதிகப்படுத்து என்பதே. ஆப்கானிடம் தோல்வி நமது மிக மோசமான தோல்வி. அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெல்ல முயற்சி செய்வோம்.

பகர் ஜமானை அணிக்கு மீண்டும் கொண்டு வந்து ஆக்ரோஷமாக ஆடச்சொல்லுங்கள். பாபர் அசாம் ஸ்ட்ரைக் ரேட் 120களில் இருக்க வேண்டும், ஆனால் நாம் 80-90களில் இருக்கிறோம் குர்பாஸ் ஸ்ட்ரைக்ரேட் 122 இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் பாகிஸ்தான் 150 டாட் பால்களை அளிக்கிறது. இது அச்சமூட்டுகிறது. என்றார் ஷோயப் அக்தர்.

வாசிம் அக்ரம்: மூன்று வாரங்களாக நாங்கள் இங்கு உட்கார்ந்து அலறிக்கொண்டிருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு ஃபிட்னெஸ் டெஸ்ட்டும் வைக்கப்படவில்லை. நான் ஒவ்வொருவர் பெயரையும் சொல்ல வேண்டுமா, அவ்வளவுதான் அவர்கள் முகம் பெருத்து விடும். அவர்கள் கிலோ கணக்கில் இறைச்சியை தின்கிறார்கள்.

உடற்பரிசோதனை இருக்க வேண்டும். நாட்டுக்காக ஆடுவதற்கு அவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. ஆகவே ஏதாவது ஒரு அளவு கோல் வேண்டும். மிஸ்பா கோச் ஆக இருந்த போது அவரிடம் அளவு கோல் இருந்தது, அவர் தேர்வு செய்ய வீரர்களுக்கு இன்னது வேண்டும் என்ற அளவு கோல் வைத்திருந்தார். வீரர்களுக்கு அவரை பிடிக்கவில்லை, ஆனா அவர் முறை வேலை செய்தது. பீல்டிங் என்பது ஃபிட்னெஸ் பொறுத்தது, அங்குதான் நாம் சோடை போகிறோம். என்கிறார் வாசிம் அக்ரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x