Published : 23 Oct 2023 01:51 PM
Last Updated : 23 Oct 2023 01:51 PM

ODI WC 2023 | வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரமுக்குப் பிறகு சிறந்த பவுலர் முகமது ஷமி!

முஹம்மது சமி

நடப்பு உலகக் கோப்பையில் அணிச் சேர்க்கை அது இது என்று பேசி ஷமியை ஒதுக்கி வைத்து விட்டு கடைசியாக ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நேற்று தர்மசாலா மேட்சில் ஷமிக்கு வாய்ப்புக் கொடுத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. ஷமி வாய்ப்புக்காகக் காத்திருந்தது போல் பந்து வீச்சில் வெளுத்து வாங்கி விட்டார். 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நேற்றைய இந்திய வெற்றியை சாத்தியமாக்கினார். இவருக்குப் பதில் சர்துல் தாக்கூர் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நியூஸிலாந்து 300 ரன்கள் எடுத்திருப்பார்கள். இந்திய அணி சேசிங்கில் திணறி ஒருவேளை தோற்றும் போயிருக்கலாம் என்றே கூற முடியும்.

ஷமியின் உலகக்கோப்பை புள்ளி விவரங்களும் அவரை உட்காரவே வைக்க முடியாது என்பதை உறுதி செய்கிறது. 12 உலகக்கோப்பைப் போட்டிகளில் ஷமி 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 15.02, சிக்கன விகிதம் ஓவருக்கு 5.09 தான். விராட் கோலி நேற்று தன் 49வது சதத்தை எடுத்து பேசுபொருளாகியிருந்தாலும் ஷமியின் அபாரப் பந்து வீச்சை ஒருவரும் புறந்தள்ளி விட முடியாது என்பது பட்டவர்த்தனம். மைக்கேல் ஹோல்டிங் தன் வேகத்தை இழந்த பிறகு தன் அருமையான கட்டர்கள் மூலம் பெரிய பேட்டர்களுக்கு தலைவலியாக இருந்தது போல், முகமது ஷமி தனது கட்டர்கள் மூலம் நேற்று நியூஸிலாந்தின் 320 ரன்கள் வாய்ப்பை முறியடித்தார். பிட்சை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன் பந்து வீச்சை சரி செய்வதில் ஷமி கில்லாடி.

ஷமியின் இன்னொரு முக்கியமான அம்சம், அதாவது பாகிஸ்தானிய லெஜண்ட்களான வக்கார் யூனிஸ் மற்றும் வாசிம் அக்ரம் பாணி துல்லியம் என்னவெனில் அதிகம் போல்டுகளை எடுப்பது. நேற்று இந்திய அணியின் பீல்டிங் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. பாகிஸ்தானின் பீல்டிங் படுமோசமாக இருந்ததால்தான் வாசிமும், வக்காரும் போலல்டு எடுக்கும் உத்திகளை வகுத்தனர். போல்டு, எல்.பி. தான் நமக்கு விக்கெட் என்று இருவரும் முடிவெடுத்தனர்.

ஷமி அந்த வகையில் ஒரு பாகிஸ்தான் ரக பவுலர் என்றே கூற வேண்டும். இதுவரை அவர் எடுத்துள்ள 176 விக்கெட்டுகளில் 57 விக்கெட்டுகள் பவுல்டு முறையில் விழுந்ததே. மூன்றில் ஒரு விக்கெட் போல்டு. வாசிம் அக்ரம் 2-ல் ஒரு போல்டு என்ற சராசரியில் எடுக்க வக்கார் யூனிஸ் மூன்றில் ஒரு விக்கெட் பவுல்டு என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றும் நியூஸிலாந்துக்கு எதிராக இவரது 5 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகள் பவுல்டு. கிராஸ் சீம் பவுலிங்கை திறம்பட செய்தார் ஷமி. அதுவும் மிட்செல் சாண்ட்னரை எடுத்த பவுல்டு அதியற்புதமான பந்து கிட்டத்தட்ட ஆட முடியாத பந்து என்றுதான் சொல்ல வேண்டும். ஹென்றியும் ஷமியின் பந்து லெந்திலிருந்து உள்ளே கட் ஆகி வந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டிருப்பார். இப்படிப்பட்ட ஒரு திறமை வாய்ந்த பவுலரை உட்கார வைத்து விட்டு உலகக்கோப்பை ஆடும் ஒரே அணி இந்திய அணியைத் தவிர வேறு அணியாக இருக்க முடியாது.

இன்று ஆஸ்திரேலியாவில் இப்படிப்பட்ட ஒரு பவுலர் இல்லை. கமின்ஸ் ஷமி போன்ற பவுலர் அல்ல. ஹாரிஸ் ராவுஃப் என்றார்கள், ஆனால் அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மரண அடி வாங்கினார் அவர். நேற்று குல்தீப் யாதவ்வும் சாத்து வாங்கி விட்டார். இங்கிலாந்தில் பவுலர்களே இல்லை. மணிக்க்கு 150 கிமீ வீசும் மார்க் உட்டின் பந்துகள் எல்லாம் அதை விட வேகமாக சிக்சர்களுக்குப் பறக்கின்றன.

இந்நிலையில் வாசிம், வக்கார் போன்று இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷங்கள்தாம் பும்ரா-ஷமி கூட்டணி. அதை சிறப்பாகப் பராமரிக்க வேண்டும். சரியாகப் பயன்படுத்த வேண்டும். தான் ஏன் அணிக்கு மிக அவசியம் என்பதை நேற்று ஷமி நிரூபித்து விட்டார், ஷமி இல்லையெனில் இந்திய அணி நேற்று 320 ரன்களைச் சேஸ் செய்யுமாறு அமைந்து தோற்றிருக்கக் கூடும். ஆகவே இனிமேலும் ஷமியை உட்கார வைப்பது என்பது இயலாத காரியம், அப்படி உட்கார வைப்பது இந்திய அணியின் நலன்களுக்கு பயன் விளைவிக்காது என்பதை இனிமேலாவது ராகுல் திராவிடும், ரோஹித் சர்மாவும் உணர வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x