Published : 20 Oct 2023 03:54 PM
Last Updated : 20 Oct 2023 03:54 PM

IPL | மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமனம்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு எப்படியோ, அதேபோல் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல நெருக்கடியான தருணங்களில் போட்டியை வென்றுகொடுத்துள்ளார். ஐபிஎல்லில் 13 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓர் அங்கமாக இடம்பிடித்திருந்தார். இதில் 11 வருடங்கள் வீரராக மலிங்கா இடம்பெற்றிருந்தார். ஒரு வருடம் பந்துவீச்சு பிரிவுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டுள்ளார். அவற்றில், நான்கு முறை ஐபிஎல் கோப்பை, இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பை, ஒரு மேஜர் லீக் கோப்பை என மொத்தம் 7 கோப்பைகளை மும்பை இந்தியன்ஸ் அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

மேஜர் லீக் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உரிமையான MI நியூயார்க் மற்றும் MI கேப்டவுன் அணிகளுக்கு பிரதான பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா செயல்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைக் கொண்ட மலிங்காவை, 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் விடுவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதனிடையேதான் சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஷேன் பாண்ட் விலகினார். இதையடுத்து அப்பொறுப்புக்கு லசித் மலிங்காவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்துள்ளது. இதன்மூலம் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓர் அங்கமாக மலிங்கா வரவுள்ளார்.

மார்க் பவுச்சர் மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோர் அடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குழுவில் அவர் இணையவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேசியுள்ள மலிங்கா, "மார்க் பவுச்சர், பொல்லார்ட் மற்றும் ரோகித் உடன், குறிப்பாக இளம் வீரர்கள் அதிகம் உள்ள மும்பையின் பவுலிங் யூனிட் உடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x