Published : 14 Oct 2023 06:36 AM
Last Updated : 14 Oct 2023 06:36 AM

ODI WC 2023 | பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இந்திய அணி

பாபர் அஸம் மற்றும் ரோகித் சர்மா

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 1.30 லட்சம் பேர் அமரக்கூடிய அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

1983 மற்றும் 2011-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 5 முறைசாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களுக்குள் மட்டுப்படுத்தி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிகண்டிருந்தது. 1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணியானது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. தொடர்ந்து இலங்கை அணிக்குஎதிரான ஆட்டத்தில் 345 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி சாதனை படைத்தது.

பாகிஸ்தான் அணி கடைசியாக இந்திய மண்ணில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தற்போதுதான் விளையாடி வருகிறது. 7 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் பாகிஸ்தான் அணியானது இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த ஆட்டம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். அதேவேளையில் பேட்டிங்கில் டாப் 4-ல் மூன்று பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஜோடி அபாரமாக செயல்பட்டு வெற்றி தேடிக்கொடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 63 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.

அழுத்தம் மிகுந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின்டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் சவால் அளிக்கலாம். டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ள தொடக்க வீரரான ஷுப்மன் கில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும். இந்த ஆண்டில் ஷுப்மன் கில் 6 சதங்கள் விளாசி உள்ளதால் அவர், மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

ரோஹித் சர்மாவுடன் இணைந்து கில் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுக்கும் பட்சத்தில் அதனை விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

பந்து வீச்சில் பும்ரா, மொகமது சிராஜ் கூட்டணி தொடக்க ஓவர்களில் பாகிஸ்தான் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். ஹர்திக் பாண்டியா திருப்பங்கள் ஏற்படுத்திக் கொடுப்பதில் முனைப்பு காட்டக்கூடும். சுழலில் நடு ஓவர்களில் குல்தீப் யாதவ்,ரவீந்திர ஜடேஜா ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிரானஆட்டத்தில் சாதனை வெற்றி கண்ட நிலையில் இந்திய அணியை சந்திக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மொகமது ரிஸ்வான் 131 ரன்களும், அப்துல்லா ஷஃபிக் 113 ரன்களும் விளாசி அணியின் வரலாற்று வெற்றியில் பிரதான பங்கு வகித்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும்.

கேப்டன் பாபர் அஸம் இரு ஆட்டங்களிலும் கூட்டாக 15 ரன்களே சேர்த்தார். இதேபோன்று பார்மின்றி தவித்து வரும் தொடக்க வீரரான இமாம் உல் ஹக் 27 ரன்களே சேர்த்துள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கடியுடன் களமிறங்குகின்றனர். நடுவரிசை பேட்டிங்கில் மொகமது ரிஸ்வானுடன் சவுத் ஷகில் பலம் சேர்ப்பவராக உள்ளார். நெதர்லாந்துக்கு எதிராக 68 ரன்கள் சேர்த்த அவர், இலங்கை அணிக்கு எதிராக முக்கியமான கட்டத்தில் 31 ரன்கள் எடுத்திருந்தார்.

இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சும் சோடை போனது. சுழற்பந்து வீச்சும்பலவீனமாக காணப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அணியில் 2-வது சுழற்பந்து வீச்சாளரும் வலுவாக இல்லை. இந்த பலவீனங்களை இந்திய அணி தங்களுக்கு சாதகமாகபயன்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டக்கூடும்.உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணிஇதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 7 முறை விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில்மான்செஸ்டரில் நடைபெற்ற ஆட்டத்தில்இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இந்த ஆதிக்கப்போக்கை இம்முறையும் இந்திய அணி தொடரச் செய்வதில்முனைப்பு காட்டக்கூடும். அதேவேளையில் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் அணி முயற்சி செய்யக்கூடும்.

இசை நிகழ்ச்சி: இப்போட்டியையொட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிதொடங்குவதற்கு முன்னதாக 12.30 மணி அளவில் சங்கர் மகாதேவன், அர்ஜித் சிங், சுக்விந்தர் சிங் ஆகியோர் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x