Published : 27 Sep 2023 08:57 AM
Last Updated : 27 Sep 2023 08:57 AM

ஆசிய விளையாட்டு போட்டி | குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது இந்தியா: 41 வருடங்களுக்குப் பிறகு சாதனை

கோப்புப்படம்

ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குதிரையேற்ற பந்தயத்தின் டிரஸ்ஏஜ் பிரிவில்ஹிருதய் சேடா, திவ்யகிருதி சிங், அனுஷ் அகர்வாலா, சுதிப்தி ஹஜேலா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 209.205 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றது. சீனா (204.882) வெள்ளிப் பதகக்கமும், ஹாங் காங் (204.852) வெண்கலப் பதக்கமும் பெற்றன.

ஆசிய விளையாட்டு குதிரை பந்தயத்தில் இந்திய அணி 41 வருடங்களுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 3 தங்கப் பதக்கம் வென்றிருந்தது. ரகுபிர் சிங், ஈவன்டிங் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். ஈவன்டிங் அணிகள் பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்றிருந்தது. அதேவேளையில் டென்ட் பெக்கிங்கில் ரூபிந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

நேகா தாக்குர்: படகு போட்டியில் மகளிருக்கான டிங்கி- ஐஎல்சிஏ 4 பிரிவில் இந்தியாவின் நேகா தாக்குர் 27 புள்ளிகளுடன் 2-வதுஇடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான விண்ட்சர்ஃபர் ஆர்எஸ்:எக்ஸ் பிரிவில் இந்தியாவின் இபாத் அலி 52 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

கால் இறுதியில் அங்கிதா: டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6-1,6-2 என்ற நேர் செட் கணக்கில் ஹாங் காங்கின் ஆதித்ய பி கருணாரத்னேவை வீழ்த்தினார். கால் இறுதி சுற்றில் அங்கிதா ரெய்னா ஜப்பானின் ஹருகா கஜியுடன் மோதுகிறார். மற்றொரு இந்திய வீராங்கனையான ருதுஜா போஸ்லே 3-வது சுற்றில் 6-7(5), 2-6 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்ஸின் அலெக்ஸாண்ட்ரா ஈலாவிடம் தோல்வி அடைந்தார்.

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம் குமார் ராமநாதன், 5-7, 7-6, 5-7 என்ற செட் கணக்கில் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் போராடிஜப்பானின் ஷிசுகே வதனுகியிடம் தோல்வி அடைந்தார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான சுமித் நாகல் 7-6(9), 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் பெய்பிட் ஜுகேவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்குவாஷில் அசத்தல்: ஸ்குவாஷில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-0 என்றகணக்கில் வீழ்த்தியது. இந்திய அணிசார்பில் அனஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கன்னா ஆகியோர்வெற்றியை பதிவு செய்தனர். ஆடவர் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை தோற்கடித்தது. ஹரிந்தர் பால் சிங், சவுரவ் கோஷல், அபய் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பவானி தேவி ஏமாற்றம்: வாள்வீச்சில் சேபர் தனிநபர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பவானிதேவி, சீனாவின் யாகி ஹவோவுடன் மோதினார். இதில் பவானி தேவி 7-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

வாலிபாலில் 6-வது இடம்: ஆடவருக்கான வாலிபாலில் 6-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி நேற்று பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி0-3 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 25-21,25-20,25-23 என்ற கணக்கில் பெற்றி பெற்றது.

ஹாக்கியில் அபாரம்: ஆடவருக்கான ஹாக்கியில் இந்திய அணி நேற்று சிங்கப்பூருடன் மோதியது. இதில் இந்திய அணி 16-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில்கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 4 கோல்களும் (24, 39, 40, 42-வது நிமிடங்களில்), மன்தீப் சிங் 3 கோல்களும் (12, 30, 51-வது நிமிடங்கள்), அபிஷேக் (51,52-வது நிமிடங்கள்), வருண் குமார் (55, 56-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களும் லலித் குமார் உபாத்யாய் (16-வது நிமிடம்), குர்ஜாந்த் சிங் (22-வது நிமிடம்), விவேக் சாகர் பிரசாத் (23-வது நிமிடம்), மன்பிரீத் சிங் (37-வது நிமிடம்), ஷம்ஷெர் சிங் (38-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒருகோலும் அடித்தனர். இந்திய அணிக்குஇது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 16-0என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வென்றிருந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (28-ம்தேதி) ஜப்பானுடன் மோதுகிறது.

பிரதமர் வாழ்த்து: ஆசிய விளையாட்டு குதிரையேற்றத்தின் டிரஸ்ஏஜ் அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், எக்ஸ் பதிவில், “பல தசாப்தங்களுக்குப் பிறகு, நமது குதிரையேற்ற அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது மிகவும் பெருமைக்குரியது. ஹிருதய் சேடா, அனுஷ்அகர்வாலா, சுதிப்தி ஹஜேலா மற்றும் திவ்யகிருதி சிங் ஆகியோர்இணையற்ற திறமை, குழுப்பணியை வெளிப்படுத்தி சர்வதேசஅரங்கில் நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தவரலாற்று சாதனைக்காக இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x