Published : 23 Sep 2023 09:37 AM
Last Updated : 23 Sep 2023 09:37 AM

முடிவுக்கு வந்த ‘ஷமியா, தாக்கூரா’ அவசியமற்ற விவாதம் - தேறாத தாக்கூர், நிரூபித்த ஷமி!

டாப் 5-6 வீரர்கள் ஆடி ஒரு நாள் போட்டியை வெற்றி பெற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களால் முடியாத அசாதாரணச் சூழல்களில் மட்டுமே கீழ் வரிசை குறிப்பாக நம்பர் 8 வீரர் பேட்டிங்கில் ஆட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படலாம். ஆனால் டாப் வீரர்கள் அல்லது சூப்பர் ஸ்டார்கள் எனப்படுவோர்கள் தங்கள் நினைத்தால் ஆடலாம் இல்லையென்றால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் இருக்கும் போது நம்பர் 8-ல் ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்றும் அப்போது அணியில் பேட்டிங்கும் செய்யக்கூடிய ஷர்துல்ல் தாக்கூரை வைத்துக் கொள்வதா, இல்லை டாப்பவுலரான ஷமியை தூக்கி விடுவதா என்று கிரிக்கெட் விவாத அரங்கில் எழுந்த போலி பட்டிமன்றத்திற்கு நேற்று ஷமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஷமி, பும்ரா சேர்க்கைதான் உலக அணிகளுக்குப் பெரிய அச்சுறுத்தல். ஷமி நேற்று இந்திய அணியை கடந்த சுற்றில் காலி செய்த மிட்செல் மார்ஷிற்கு அருமையான ஒரு ஓவரில் அவுட் ஸ்விங்கர் பந்தை வீசி ஸ்லிப் கேட்ச் ஆக வைத்தார். பிறகு ஸ்டீவ் ஸ்மித் அருமையாக ஆடிக்கொண்டிருந்த போது ஒரு அபாரமான இன்ஸ்விங்கரை வீசி பவுல்டு எடுத்தார். பிறகு ஸ்டாய்னிஸ், ஷார்ட், ஷான் அபாட் ஆகியோரையும் துல்லியமான பந்தில் வீழ்த்தி தன் கரியர் பெஸ்ட் பவுலிங்காக 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த பவுலிங் வரிசையில் பலவீனமான இணைப்பு ஷர்துல் தாக்கூர் தான். அவர் நேற்று 10 ஓவர்களில் 11 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 78 ரன்களைக் கொடுத்தார். ஒரு தினத்தில் ஒருவர் இது மாதிரி அடி வாங்குவது சகஜம்தான் என்ற வாதம் எழுந்தாலும் கொடுத்த விதம் பற்றிய கேள்வி எழுகிறது. அதாவது 60 பந்துகளில் 28 ரன் இல்லாத பந்துகளை வீசிய ஷர்துல் தாக்கூர் மீதமுள்ள ரன் கொடுத்த 32 பந்துகளில் 78 ரன்களைக் கொடுத்துள்ளார் இதில் 13 பவுண்டரி பந்துகளை வீசியுள்ளார் என்பது சர்வதேச தரத்திற்கு உகந்த பவுலிங் அல்ல.

இந்த விதத்தில் ஐடியல் பவுலர் பும்ரா, 60 பந்துகளில் 39 டாட்பால்கள், 21 பந்துகளில் 43 ரன்களையே விட்டுக் கொடுத்துள்ளார். 6 பந்துகள்தான் பவுண்டரி பந்துகள், அதே போல் அஸ்வின் 60 பந்துகளில் 31 டாட் பால்கள் போக 29 பந்துகளில் 47 ரன்களை 4 பவுண்டரி பந்துகளுடன் வீசியுள்ளார். எனவே இதுதான் ஐடியல். ஒரு பவுலரைத் தேர்வு செய்யும் முன் அவரது ரன் கொடுக்கும் விகிதத்தையும் எத்தனை பவுண்டரி பந்துகள் வீசுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். எப்படியிருந்தாலும் ஹர்திக் பாண்டியா வந்து விட்டால் ஷர்துல் தாக்கூர் இடம் இருக்காது.

ஆனால் நாம் என்ன கூற வருகிறோம் என்றால், ஷர்துல் தாக்கூரை உலகக்கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக்கி விட்டு அஸ்வினை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்கிறோம்.

ஷமி பந்து வீச்சின் முக்கிய அம்சம் என்னவெனில் கிளென் மெக்ரா போல் எளிமையாக வைத்துக் கொள்வது, பந்து புதிதாக இருக்கும் போது பந்தின் தையலை நேராகப் பிடித்து அதை நன்றாக பிட்சில் படுமாறு வீசி எழுப்பி, உள்ளேயும் வெளியேயும் ஸ்விங் செய்வது. பந்து பழசானதும் கிராஸ் சீம் பவுலிங் செய்து கட்டர்களை வீசுவது. இந்த விதத்தில் ஷமி ஒரு கிளாசிக் பவுலர். ஷர்துல் தாக்கூர் 42 ஒரு நாள் போட்டிகளில் இதுவ்ரை 7 முறை செம சாத்து வாங்கி ஓவருக்கு 7 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்துள்ளார்.

ஷர்துல் தாக்கூர் சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்த விக்கெட்டுகளெல்லாம் ஏதோ அவரை அறியாமல் அதிர்ஷ்டத்தில் எடுத்தது போல்தான் தெரிகிறது என்று ஒரு சிலர் சொல்வதையும் ஏற்கத்தான் வேண்டியுள்ளது. ஆகவே பும்ரா, ஷமி, சிராஜ் என்பதே சரியான சேர்க்கையாக இருக்கும். ஆனால் பாண்டியா வந்து விட்டால் சேர்க்கை மாறும். ஆனால் எதற்காகவும் ஷமியை உட்கார வைப்பது என்பது நிச்சயம் பெரிய தவறு செய்வதாகி விடும். தாக்கூர் எடுக்கும் விக்கெட்டுகளும் கூட பெரிய அச்சுறுத்தலான பந்துகளில் எடுக்கப்பட்டவை அல்ல, பேட்டர்கள் ஏதோ ஒரு நெருக்கடியில் செய்யும் தவறுகளினால் எடுத்த விக்கெட்டுகள்தாம்.

ஆகவே ஷமிக்குப் பதிலாக தாக்கூர் இருந்திருந்தால் நாம் 15 ரன்களில் தோற்றிருக்க வேண்டாம் 20 ரன்களில் தோற்றிருக்க மாட்டோம் என்று அங்கலாய்ப்பவர்கள் குற்றம் சொல்ல வேண்டியது டாப் ஆர்டர்களைத்தானே தவிர ஷமியை அவரது பேட்டிங்கிற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x