Published : 16 Sep 2023 05:47 AM
Last Updated : 16 Sep 2023 05:47 AM

சென்னை வந்தது உலகக் கோப்பை

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் டிராபி உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நகரங்களுக்கு பயணித்து வருகிறது. இந்த வகையில் டிராபி நேற்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. டிராபியுடன் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உற்சாகமாக போஸ் கொடுத்தனர். படம்:எஸ். சத்தியசீலன்

சென்னை: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. தொடக்க ஆட்டத்தில் அக்டோபர் 5-ம் தேதிஇங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் டிராபி இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு மட்டும் இல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் பயணித்து வருகிறது. இந்நிலையில் டிராபி நேற்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பான நிகழ்ச்சியில் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் ஆர்.ஐ.பழனி, துணைச் செயலாளர் ஆர்.என்.பாபா, முன்னாள் செயலாளர் காசி விஸ்வநாதன், பொருளாளர் ஸ்ரீனிவாச ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் 2 நாட்கள்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஸ்ரீகாந்த் ஆகியோர் வீடியோ வாயிலாக தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்ட நிலையில் இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்துகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த டிராபி ரசிகர்களின் பார்வைக்காக இன்றும், நாளையும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து டிராபி பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x