Published : 15 Aug 2023 02:45 PM
Last Updated : 15 Aug 2023 02:45 PM

“இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஆழம் தேவை” - ஒப்புக் கொண்ட ராகுல் திராவிட்

கோப்புப்படம்

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-3 என்று இழந்துள்ள நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்த வேண்டியுள்ளதை பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஒப்புக் கொண்டுள்ளார்.

11-ம் நம்பர் வீரர் வரை பேட்டிங் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என தெரிகிறது. இந்த தேடலினால்தான் 5 டி20 போட்டிகளிலும் 11-வது நிலையில் ஐந்து வெவ்வேறு வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இது என்ன வேடிக்கை? டாப் ஆர்டர் முடித்து வைக்க வேண்டிய ஆட்டத்தை, நம்பர் 11 வரைக்கும் ஆட வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன யுக்தி என்று புரியவில்லை. யாரைக் காக்க இந்திய பேட்டிங் வரிசையில் ஆழம் வேண்டும் என திராவிட் நினைக்கிறார் என்பதும் புரியவில்லை.

டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையை பலப்படுத்த வேண்டும். ரிங்கு சிங், ராகுல் திவாட்டியா போன்றோரை வேண்டுமென்றே உட்கார வைத்து விட்டு நம்பர் 11- வரை பேட்டிங் டெப்த் வேண்டும் என்று கூறுவது புரியாத புதிராக உள்ளது. இது தொடர்பாக ராகுல் திராவிட் என்ன கூறியுள்ளார் என்பதை முதலில் பார்ப்போம்: “அணியைப் பொறுத்தவரை வீரர்களை மாற்றி அமைக்கும் நெகிழ்வுத்தன்மை அற்றதாக பேட்டிங் வரிசை உள்ளது. முன்னோக்கிப் பார்க்கும் போது இன்னும் சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. அந்த வகையில் கடைசி வரை பேட்டிங் ஆடுவோர் தேவை. இதுவரை எங்களால் முடிந்ததைச் செய்து பார்த்தோம். ஆனால், கடைசி வரை பேட்டிங் ஆழம் என்பதை இப்போது நாங்கள் முனைப்பாக்க விரும்புகிறோம். அதற்காக பந்து வீச்சை பலவீனப்படுத்த முடியாது. ஆனால் கடைசி வரை பேட்டிங் தேவை என்ற அவசியத்தையும் இப்போது பேசியாக வேண்டியுள்ளது.

ஸ்கோர்கள் பெரிதாகப் போகப் போக கடைசி வரை பேட்டிங் அவசியம். மே.இ.தீவுகள் அணியில் அல்சாரி ஜோசப் வரை பேட் செய்கிறார்கள். எனவே சில அணிகளில் ஆழம் உள்ளது. அந்த வகையில் இந்திய அணிக்கு சவால்கள் உள்ளன. அதை சரி செய்ய வேண்டும். இந்த தொடர் நமக்குக் கற்பித்த பாடம் என்னவெனில் அணியின் பேட்டிங் வரிசையில் ஆழம் வேண்டும் என்பதையே” என தெரிவித்தார்.

இது தோனி செய்து காட்டியதை மறந்ததால் எழும் புதிய சிக்கலே. தோனி ஆல்ரவுண்டர்களை அதிகம் விரும்புவது இதனால்தான். அவர் ஒருமுறை கூறினார் வெறும் பேட்டராகவோ, வெறும் பவுலராகவோ இருப்பது இனி சாத்தியமில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஆல்ரவுண்ட் திறமையே கோலோச்சும் என்று முன்னரே தோனி கூறினார். இது அடிப்படையான விஷயம்தான். ஆனால், இங்கு அணி தேர்வுக்குழுவினர் ஐபிஎல் போட்டிகளில் ஆடும் ஆல்ரவுண்டர்களை மதிப்பதில்லையே. ராகுல் திவாட்டியா போன்றோரை எடுப்பதில்லை. ரிங்கு சிங் போன்ற பினிஷர்களை கண்டு கொள்வதில்லை. ஐபிஎல் வணிகர்கள்தான் மற்றும் அதன் வணிக ஆதிக்கம்தான் அணி தேர்வை தீர்மானிக்கின்றது. அதனால்தான் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஷுப்மன் கில் போன்றோர் அணியில் நீடிக்கின்றனர்.

வாசிம் ஜாஃபர் இது குறித்து கூறும் போது, “யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர்தான் எதிர்காலம். ஆனால் நிறைய இடைவெளிகள் உள்ளன. இந்திய டாப் ஆர்டர் வரிசை சரியில்லை. 7-ம் நிலையிலிருந்து பினிஷிங் வரை கொண்டு செல்ல வீரர்கள் இல்லை. 7-ம் நிலை முதல் பேட்டர்கள் இல்லை என்பதால் டாப் ஆர்டர் நிதானிக்கவும் வேண்டியுள்ளது, ஸ்கோரையும் அடிக்க வேண்டியுள்ளது. இது கடினமானது.

உலகக் கோப்பை நெருங்குகிறது. 8 அல்லது 9-ம் நிலையில் இறங்குபவர்கள் பேட்டிங் ஆடக்கூடியவர்களாக இருப்பது அவசியம். கொஞ்சம் பவுலிங் போட்டு பேட்டிங்கில் சிக்ஸ் அல்லது பவுண்டரி அடிக்கும் திறமையுடைய ஷிவம் துபே, வெங்கடேஷ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை வளர்த்தெடுக்க வேண்டும்” என்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x