Published : 22 Jul 2023 10:22 PM
Last Updated : 22 Jul 2023 10:22 PM

18 வயதில் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை - காரணம் இதுதான்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை ஆயிஷா நசீம், 18 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

18 வயதில் பெரும்பாலானோர் கிரிக்கெட் கரியரை தொடங்கும் நேரத்தில் ஆயிஷா நசீம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தேசிய அணிக்காக இதுவரை 4 ஒருநாள் போட்டி மற்றும் 30 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் ஆயிஷா. சிறுவயதிலேயே ''திறமையான வீராங்கனை'' என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரமால் புகழப்பட்டவர் ஆயிஷா நஷீம்.

அவரின் திறமைக்கு சான்று ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான ஆட்டம். அப்போட்டியில் 20 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரிகளுடன் 44 ரன்களை குவித்தார் ஆயிஷா. தொடர்ந்து அபார ஆட்டங்களை வெளிப்படுத்தியதால் பாகிஸ்தான் மகளிர் அணியின் எதிர்காலம் என்று பாராட்டப்பட்டவர். இதனிடையே தான் 18 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி தந்துள்ளார்.

ஓய்வுக்கு காரணம்: "முஸ்லிமாக இருக்க விரும்புவதாகவும், இஸ்லாமிய போதனைகளின்படி வாழ விரும்புவதாகவும்" ஓய்வுக்கான காரணங்களாக தெரிவித்துள்ள ஆயிஷா, இது தனது தனிப்பட்ட முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவர் நிடா டார், சில பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தரப்பில் ஆயிஷாவை தொடர்ந்து விளையாட வைக்க எடுத்த முயற்சிகள் விரும்பிய பலன் தரவில்லை. கடந்த மார்ச் மாதமே அவர் ஓய்வு முடிவுக்கு வந்துவிட்டார் என்கிறது பிசிபி.

பழமைவாத குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஆயிஷா மிகவும் சிரமப்பட்டே கிரிக்கெட் விளையாட குடும்பத்திடம் அனுமதி பெற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணியுடன் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கியவுடன், வீட்டில் பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும், இதையடுத்தே ஓய்வு பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x