Published : 22 Jul 2023 12:53 PM
Last Updated : 22 Jul 2023 12:53 PM

மறக்குமா நெஞ்சம் | 2010-ல் இதே நாளில் 800-வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றிய முத்தையா முரளிதரன்!

முத்தையா முரளிதரன் | கோப்புப்படம்

காலே: கடந்த 2010-ல் இதே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 800-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்திருந்தார் முத்தையா முரளிதரன். இது கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்று சாதனையாக அமைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளராக முன்னாள் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் அறியப்படுகிறார். கடந்த 1992-ம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அறிமுக வீரராக விளையாட தொடங்கினார். 2011 வரை அவரது ஆட்டம் தொடர்ந்தது. 133 டெஸ்ட் போட்டி மற்றும் 350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

முரளிதரன் 800: கடந்த 2010-ல் இதே ஜூலை மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக முரளிதரன் அறிவித்தார். இந்திய அணியுடன் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதாகவும் அறிவித்தார். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற மைல்கல்லை எட்ட 8 விக்கெட்டுகள் அவருக்கு தேவைப்பட்டது. இலங்கையின் காலேவில் நடைபெற்ற அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் (இந்தியா ஃபாலோ ஆன்) 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் 800 விக்கெட் சாதனையை எட்ட மேலும் ஒரு விக்கெட் முரளிதரனுக்கு தேவைப்பட்டது. இறுதியாக ஓஜா விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தப் போட்டி ஜூலை 18-ம் தேதி தொடங்கியது. ஜூலை 22-ம் தேதி தனது 800-வது டெஸ்ட் விக்கெட்டை அவர் கைப்பற்றி இருந்தார்.

தனது 800 விக்கெட் சாதனையை நெருங்கும் வாய்ப்பு இந்திய வீரர் அஸ்வினுக்கு இருப்பதாக கடந்த 2021-ல் முரளிதரன் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ லிங்க்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x