Published : 13 Jul 2023 05:01 PM
Last Updated : 13 Jul 2023 05:01 PM

“என்னை மூளைச்சலவை செய்துவிட்டார் ராகுல் திராவிட்” - சாதனை நாயகன் அஸ்வின் பகிர்வு

ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் திராவிட் | கோப்பு படம்.

மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின் 702 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய 3-வது இந்திய சாதனையாளர் ஆனார். அளப்பரிய இந்த சாதனை குறித்து அஸ்வின் கூறுகையில், தன்னடக்கத்துடன் தன் சொந்த சாதனைகள் குறித்த கவனம் தனக்கு இல்லை என்றார் திட்டவட்டமாக.

அதாவது, ஓர் அணியில் 15-16 வருட பயணம் என்பது நம் சொந்த சாதனைகள் பற்றியதல்ல. அணிக்காக நம் நினைவும், நமக்கான அணியின் நினைவும் கொண்டது என்று திராவிட்டை முதன் முதலில் கோச்சாக சந்தித்த போது கூறியது தன்னை மூளைச்சலவை செய்து விட்டது என்கிறார் அஸ்வின். தன் 93-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் அஸ்வின் 479 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அளப்பரிய சாதனையை நோக்கிப் பயணிக்கிறார். நேற்றைய 5 விக்கெட்டுகள் மூலம் ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேலான விக்கெட்டுகளை 33 வது முறையாகக் கைப்பற்றியுள்ளார்.

2011-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக அஸ்வின் தோனி கேப்டன்சியில் டெல்லியில் அறிமுகமானார். அறிமுக டெஸ்ட்டிலேயே 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். உண்மையில் 2006-லேயே தமிழ்நாடு அணிக்காக அறிமுகம் ஆனார் அஸ்வின். கடின உழைப்பு மற்றும் தொடர்ந்து திறமையை புதுப்பித்து வந்தாலும் 5 ஆண்டுகள் கழித்து 2011-ல் தான் அறிமுகமாகிறார்.

அறிமுகமானதிலிருந்து அஸ்வினின் பங்களிப்பு இல்லாத டெஸ்ட் போட்டிகள் என்று மிகவும் குறைவான டெஸ்ட் போட்டிகளையே பட்டியலிட முடியும். இந்திய அணியின் வெற்றிப்பாதையில் ஓர் அங்கமாகத் திகழ்ந்தவர் அஸ்வின் என்றால் அது மிகையானதல்ல. இப்போதுதான் விராட் கோலி-சாஸ்திரி கூட்டணி, திராவிட் - ரோஹித் சர்மா கூட்டணி போன்றவை அதீதமாக யோசித்து அஸ்வினை முக்கியமான போட்டி என்று கூட பாராமல் ‘ட்ராப்’ செய்கின்றனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளில் அஸ்வினைப் போன்ற ஒரு பவுலரை கொண்டாடித் தீர்ப்பார்கள். ஆனால் இங்கு 3 பந்தில் 3 சிக்சர்கள் அடித்துப் பிறகு காணாமலே போகும் பேட்டரைக் கொண்டாடும் அளவுக்கு அஸ்வின் போன்றோரைக் கொண்டாடுவதில்லை என்பது வருந்தத் தக்கது.

இந்நிலையில், சாதனை நாயகன் அஸ்வின் ஒரு பேட்டியில் கூறியதாவது: “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. காலம் எத்தனை வேகமாக உருண்டோடி விட்டது. 14 ஆண்டுகள் தொடர்ச்சியான பயணம். ஐபிஎல் தொடர்களையும் சேர்த்தால் 15-16 ஆண்டுகால பயணம். இத்தனை ஆண்டுகள் எப்படி கழிந்தது; கடந்து சென்றது என்பதே தெரியவில்லை.

முதன் முதலாக ராகுல் திராவிட்டை நான் பயிற்சியாளராகப் பார்க்கும்போது, அவர் இவ்வாறு கூறினார், “நீ எடுக்கும் விக்கெட்டுகளைப் பற்றியதோ, ரன்களைப் பற்றியதோ அல்ல கிரிக்கெட் பயணம் என்பது, இவற்றையெல்லாம் நாம் மறந்து விடுவோம். ஓர் அணியாக நாம் உருவாக்கிக் கொள்ளும் அபாரமான நினைவுகள்தான் எஞ்சும். இதுதான் நம்மிடம் நிரந்தரமாகத் தங்குவது” என்றார். இது எத்தனை பெரிய உண்மை. திராவிட் கூறுவது எனக்குப் புரிகிறது.

திராவிட் என்னை மூளைச் சலவை செய்து விட்டார். அதாவது, என்னுடைய கிரிக்கெட் பயணம் வெகு வேகமாக ஓடி இப்போது இந்நிலைக்கு வந்துள்ளது. ஆனால், என்னால் எதையும் எந்த ஒரு குறிப்பிட்ட தருணத்தையும் மீண்டும் எண்ணிப் பார்க்க முடியவில்லை. எப்படிக் கடந்தது என்பதை நினைவுகூர முடியவில்லை. ஆனால், எனக்காக கிரிக்கெட் கொடுத்தது இதைத்தான். அதற்காக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட தருணங்கள் எத்தனை எனக்குக் கைகூடும் என்பது தெரியவில்லை. ஆனால் என் வழியில் வரும் அனைத்தையும் நான் முழு நிறைவான மகிழ்ச்சியுடன் கொண்டாடுவேன்” என்று கூறினார் அஸ்வின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x