Published : 26 Jun 2023 03:11 PM
Last Updated : 26 Jun 2023 03:11 PM

ஜேம்ஸ் ஆண்டர்சனை விட ஜாகீர் கான் மிகச் சிறந்த பவுலர்: இஷாந்த் சர்மா அடுக்கும் காரணங்கள்

ஜாகீர் கான்

ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்று உலகக் கிரிக்கெட்டில் ஆடிவரும் அதிமூத்த வீரர். 686 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப்பந்து வீச்சின் உலக நாயகனாக அதிக விக்கெட்டுகள் சாதனையுடன் இன்னும் ஆடி வருகிறார். ஆனால், இவரை விட ஜாகீர் கான் சிறந்த பவுலர் என்கிறார் இஷாந்த் சர்மா.

இஷாந்த் சர்மா சொல்வது சரிதான்! ஆண்டர்சனே இதனை ஒப்புக் கொள்வார். பேட்டர்களை ஒர்க் அவுட் செய்து வீழ்த்தும் திறமையை தான் ஜாகீர் கானிடமிருந்து கற்றுத் தேர்ந்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒருமுறை கூறினார். ஒருவேளை இன்று அதனை அவர் நினைவுகூருவாரோ மாட்டாரோ, ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒருகட்டத்தில் ஜாகீர் கானிடம் பேட்டர்களை ஒர்க் அவுட் செய்வது எப்படி என்பதை கற்றுக் கொண்டதாகத் தெரிவித்திருந்தார் என்பதே உண்மை.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த இஷாந்த் சர்மா கூறியதாவது: ஆண்டர்சனின் பவுலிங் ஸ்டைல் மற்றும் பவுலிங் முறை முற்றிலும் வேறு. அவர் பெரும்பாலும் மேகமூட்டமான வானிலையில் இங்கிலாந்தில் அதிகம் வீசுபவர். அவர் ஒருவேளை இந்தியாவின் பிட்ச்களில் அதிகம் ஆடியிருந்தால்... ஏன் இந்தியாவில் அதிகம் ஆடியிருந்தால்....? ஆம்! அதனால்தான் சொல்கிறேன் ஜாகீர் கான் ஜிம்மி ஆண்டர்சனை விட சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று.

இவ்வாறு கூறிய இஷாந்த் சர்மா, இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி விவரித்தார். அந்தச் சம்பவம் என்னவெனில் பிரெண்டன் மெக்கல்லம், இஷாந்த் சர்மா பந்தை அடித்து 3 ரன்களை எடுத்தார், ஜாகீர் கான் பந்தை சரியாகத் தடுக்காமல் கோட்டை விட்டதால் இஷாந்த் சர்மா அவரைத்தான் வசைமொழியில் ஏசினார் என்று அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. இப்போது அதை மறுத்துப் பேசிய இஷாந்த் சர்மா.

“நான் எனக்கு நானே, என்னை நானே நொந்து கொண்டு சில வார்த்தைகளைக் கூறினேனே அன்றி அணியின் எந்த ஒரு சகவீரரையும் நான் ஒரு போதும் கடிந்து கொண்டதில்லை, பீல்டிங் சரியாக செய்யவில்லை என்றாலோ, கேட்சை விட்டாலோ நான் இதெல்லாம் ஆட்டத்தின் அங்கம் என்று எடுத்துக் கொள்பவன். அதுவும் ஜாகீர் கான், அவர் என் குரு போன்றவர், அவரைப்போய் நான் தகாத வார்த்தைகளினால் பேசுவேனா?

பிரெண்டன் மெக்கல்லம் போட்டு சாத்தி எடுத்துக் கொண்டிருந்தார், அந்தக் கடுப்பில் என்னை நானே திட்டிக் கொண்டேன். நான், ஷமி, ஜாகீர் கான் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள்தான் இருந்தோம். ஒவ்வொரு 4 ஓவர்களுக்கும் பிறகும் எங்களில் ஒருவர்தான் மாறி மாறி வீசிக்கொண்டிருந்தோம், பிட்ச் படு மட்டை பிட்ச். நான் அந்த வெறுப்பைக் காட்டினேனே தவிர ஜாகீர் மீதா காட்டுவேன்?” என்றார்.

ஜாகீர் கான் பெரும்பாலும் இந்திய பிளாட் பிட்ச்களில் வீசியே பெரிய ஆளானார். 2003 உலகக் கோப்பையில் இறுதி வரை இந்திய அணி வந்ததற்கு ஜாகீர் கான் பெரிய காரணம். 2011 உலகக்கோப்பையில் இவரும் யுவராஜ் சிங்கும்தான் தொடர் நாயகர்கள் என்றே கூறிவிடலாம்.

92 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜாகீர் கான் உலகின் முன்னிலை வீரர்களை தன் ஸ்விங் மற்றும் சாதுரியமான லெந்த் மற்றும் லைன் மூலம் படுத்தி எடுத்துள்ளார். குறிப்பாக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்திடம் ஜாகீர் கானைப் பற்றி கேட்க வேண்டும், ஏனெனில் அவரை ஜாகீர் கான் 12 முறை வீழ்த்தியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் கோலியைப்படுத்தி உள்ளார், சச்சின் டெண்டுல்கரை படுத்தியுள்ளார். சேவாகிற்கு அதிகம் அவர் வீசவில்லை. மாறாக ஜாகீர் கான் உலக முன்னணி பேட்டர்கள் உச்ச பட்ச பார்மில் இருந்த போது இந்திய அணியின் பிரதான விக்கெட் வீழ்த்துபவராக இருந்தார் என்பதே ஜாகீர் கானின் சிறப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x