Published : 23 Jun 2023 08:23 PM
Last Updated : 23 Jun 2023 08:23 PM

“எட்ஜ்பாஸ்டன் பிட்ச் போல் எல்லா பிட்ச்களும் இருந்தால் நான் காலிதான்” - ஜேம்ஸ் ஆண்டர்சன் காட்டம்

“ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட்டுக்கான எட்ஜ்பாஸ்டன் மைதான பிட்ச் சூப்பர் மேனின் சாகச சக்திகளையும் கூட வீணடிக்கும் அந்நிய கனிமம் ‘கிரிப்டோனைட்’ போன்று இருந்தது” என்று இங்கிலாந்தின் சூப்பர் ஸ்டார் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

பாஸ்பால் கிரிக்கெட் என்னும் புதிய ஆக்ரோஷ இங்கிலாந்து பேட்டிங் உத்தி பல முனைகளிலும் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றது. ஜெஃப் பாய்காட், கண்காட்சிப் போட்டிகளாக ஆகிவிடும் ஜாக்கிரதை, என்னதான் பவுண்டரிகள், சிக்சர்கள், விரைவு கதி ரன்களை எடுத்து மக்களை மகிழ்வித்தாலும், ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி சென்றால் அது மக்களுக்கு பெரும் துயரத்தையே கொடுக்கும் என்று அவர் சாடியுள்ளார்.

இந்நிலையில், எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்தின் தோல்விக்கு மட்டையான பிட்சும் காரணம். ஜேம்ஸ் ஆண்டர்சன் இவருக்கு வயது 41 ஆகப்போகிறது. ஆனால் இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கும் வரம்பு உண்டல்லவா, பிளாட் பிட்சிலெல்லாம் வீசி விக்கெட்டை வீழ்த்தும் வயதை அவர் கடந்து விட்டார். எட்ஜ்பாஸ்டன் தோல்வியில் ஆண்டர்சன் 38 ஓவர்கள் வீசி 109 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கடைசி நேரத்தில் 2 விக்கெட்டுகள் தேவை என்ற தருணத்தில் கூட புதிய பந்தை ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் கேப்டன் ஸ்டோக்ஸ் கொடுக்கவில்லை என்பது புரியாத புதிர்.

போதாக்குறைக்கு ஆட்ட நாயகன் கவாஜாவுக்கு ஆண்டர்சன் பந்தில்தான் கேட்சை விட்டார் ஜானி பேர்ஸ்டோ. இந்நிலையில் ‘தி டெலிகிராப்’ பத்திரிகையில் ஆண்டர்சன் எழுதிய பத்தியில், “இது ஆஷஸ் தொடர். இது பெரிய விஷயமாகும். எட்ஜ்பாஸ்டன் போன்ற ஃபிளாட் பிட்சில் ஒரு விக்கெட்டை எடுப்பது பெரிய காரியம். ஆனால் அப்படி எடுக்கும் போது கூடுதல் உணர்வு ஏற்படுகிறது. காரணம் நாம் கூடுதல் உழைப்பைப் போட்டு விக்கெட்டை எடுப்பதால்தான்.

என்னைப் பொறுத்தவரை அந்தப் பிட்ச் சூப்பர் மேன்களின் சக்திகளையும் உறிஞ்சிவிடும் கிரிப்டோனைட் போன்றதே. ஸ்விங் இல்லை, ரிவர்ஸ் ஸ்விங் இல்லை. பந்தின் தையலின் ஊடான இயக்கமும் இல்லை. பவுன்ஸ் இல்லை, வேகமும் இல்லை, தண்ட பிட்சாக இருந்தது. எந்தப் பிட்சிலும் வீசக்கூடிய திறமைகளை நான் சில காலம் வளர்த்துக் கொண்டாலும் இந்தப் பிட்சில் எல்லாம் வீணாகிவிட்டன. ஏதோ மலையேறுவது போன்ற ஒரு இலக்கு என் கண் முன்னால் தோன்றியது.

பெரிய டெஸ்ட் தொடர் ஏதாவது ஒரு கட்டத்தில் பங்களிப்பு செய்வேன் என்று நினைக்கிறேன். ஆனால் இப்படி எல்லா பிட்ச்களுமே இருந்தால் அவ்வளவுதான் நான் முடிந்து விட்டேன். என் பிரச்சனை என்னவெனில் அவுட் ஃபீல்ட் மிகவும் மென்மையாக மெத்மெத்தென்று உள்ளது. ஆனால் பிட்சில் காலை தூக்கி அடித்து வீசும் போது காயங்கள் ஏற்படும் ஆபத்து அதிகம். இதை அனைத்து பவுலர்களுமே உணர்ந்தனர்.

நான் சிறுவயது முதலே கிரிக்கெட் ஆடும் போது பார்த்ததுண்டு பவுலர்கள் சூடாக வேண்டும். அப்போதுதான் அந்த நாடகீயம் சுவாரஸ்யமாக இருக்கும். கொஞ்சம் வார்த்தை மோதலும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும். ஆலி ராபின்சன் அந்த வகையில் சிறப்பாக செயல்பட்டார். அவரை அவர் வழியில் விட்டு விட வேண்டும்” என்றார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x