Published : 16 Jun 2023 09:01 AM
Last Updated : 16 Jun 2023 09:01 AM

இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதி சுற்றில் நுழைந்தார் ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த் | கோப்புப்படம்

ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி காந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து 2-வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி காந்த், சகநாட்டைச் சேர்ந்த லக்‌ஷயா செனுடன் மோதினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தனது அனுபவத்தால் காந்த் 21-17, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் 21-18, 21-16 என்ற நேர் செட்டில் ஹாங் காங்கின் கா லாங்கை தோற்கடித்து கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.

கால் இறுதி சுற்றில் காந்த், சீனாவின் லி ஷி பெங்குடன் மோதுகிறார். அதேவேளையில் ஹெச்.எஸ்.பிரனோய், ஜப்பானின் கோடை நரோகாவை எதிர்கொள்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 14-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 3-ம் நிலை வீராங்கனையான சீன தைபேவின் தை ஸு யிங்குடன் மோதினார். இதில் சிந்து 18-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-15 என்ற நேர் செட்டில் சீனாவின் ஹீ ஜி டிங், ஹவோ டாங்க் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.- பிடிஐ.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x