Published : 10 Jun 2023 06:25 AM
Last Updated : 10 Jun 2023 06:25 AM

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்: சீகம் மதுரை பேந்தர்ஸ் சீருடை அறிமுகம்

டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியின் சீருடை அறிமுக விழா சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனரான பி.தாமோதரன் புதிய சீருடையை சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கினார். அருகில் கேப்டன் ஹரி நிஷாந்த், லியோ காஃபி நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன், அணி உரிமையாளர் பத்மா தாமோதரன், முதன்மை நிர்வாகிகள் மகேஷ் சுப்ரநேயன், பூஜா தாமோதரன் மற்றும் இந்து தமிழ் திசை’யின் தலைமை இயக்க அலுவலர் சங்கர் வி.சுப்ரமணியம் ஆகியோர் உள்ளனர். படம்: ம.பிரபு

சென்னை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 7-வது சீசன் போட்டிகள் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்,லைகா கோவை கிங்ஸ், நெல்லைராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ்மற்றும், சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் 2018-ம் ஆண்டு சாம்பியனான சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி புதிய எழுச்சியுடன் இந்த சீசனில் களமிறங்குகிறது. அந்த அணியின் சீருடை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனரான பி.தாமோதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சீருடையை அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர் பத்மா தாமோதரன், முதன்மை செயல் அதிகாரிகள் பூஜா தாமோதரன், ரோஹித் தாமோதரன், மகேஷ் சுப்ரநேயன், ஸ்பான்சர்களான லியோ காஃபி நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன், மைபேப் 11 நிறுவனர் ஸ்வாதி சாமோலி, ‘இந்து தமிழ் திசை’யின் தலைமை இயக்க அலுவலர் சங்கர் வி.சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனரான பி.தாமோதரன், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியில் உள்ள முக்கியமான வீரர்களை அறிமுகப்படுத்தி பேசினார். அவர் கூறும்போது, “சீகம் பேந்தர்ஸ் அணியை தொடங்கும் போது எனது மகன் ரோஹித்திடம் நான் கூறியது ஒன்றுதான்.எனது நிறுவன வாடிக்கையாளர்களையோ, நண்பர்களையோ அணுகக்கூடாது என்று கூறினேன்.

ஆனால் அவர்கள், மகேஷ் சுப்ரநேயன் உதவியுடன் அணியை சிறப்பாக கட்டமைத்துள்ளனர். எதிபார்த்த தொகையைவிட அதிகமான நிதியை சேர்த்தனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் டிஎன்பிஎல் தொடரில் மதுரை பேந்தர்ஸ் அணி நிதி இழப்பை சந்திக்கவில்லை. இந்த ஆண்டில் வீரர்கள் ஏலம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தேவையான வீரர்களை தங்களுக்கான நிதி ஆதாரம் மூலம் அவர்கள் தேர்வு செய்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது” என்றார்.

லியோ காஃபி நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன் பேசும்போது, “மதுரை பேந்தர்ஸ் அணியுடன் கடந்த சில ஆண்டுகளாக இணைந்து பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்தப் பயணம் 2018-ல் தொடங்கியது. இந்த சீசனில் அணியின் பிரதான ஸ்பான்ஸராக இயங்கி வருகிறோம். கலை சார்ந்த துறையுடன் தான் எங்களது இயக்கம் இருந்து வந்தது.

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் நாம் பார்த்தோம் என்றால் உலக அளவில் விளையாட்டு வீரர்களை காஃபியின் மாயத்தை தெரிந்து கொண்டுள்ளனர். அது அவர்களது செயல்பாட்டை மேம்படுத்துவதாக கருதுகிறார்கள். அதே நேரத்தில் நாங்களும் விளையாட்டுடன் இணைந்து இயங்க விரும்பினோம்.

சிறிய கிரிக்கெட் அணிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஒரு காஃபி பிராண்டாக விளையாட்டு அணிகளுடன் தொடர்ந்து இயங்க விரும்புகிறோம். அந்த வகையில் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் மதுரை அணியுடன் இணைந்துள்ளோம்.

முன்பு ஃபில்டர் காபி மட்டும் செய்து கொண்டு இருந்தோம். தற்போது ரெடிமேட் டிக்காஷன், இன்ஸ்டன்ட் காபி போன்றவையும் எங்கள் தரப்பில் அறிமுகம் செய்துள்ளோம். தற்போது பிளாக் காபி நுகர்வு அதிகரித்து வருகிறது. விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் என காபி அருந்தும் மக்களின் வட்டம் விரிவடைந்துள்ளது.

மதுரை பேந்தர்ஸ் அணியும் லியோ காஃபியும் ஒரு பாதையிலேயே பயணிக்கிறோம். டிஎன்பிஎல் தொடரில் விளையாடுவதே பெரிய அளவிலான வெற்றிதான். அதை நீங்கள் அடைந்துவிட்டீர்கள். ஆனால் அங்கிருந்து உயர்வு காணவேண்டும். ஐபிஎல், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை நீங்கள் பெற வேண்டும். அதை நீங்கள் எட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x