Published : 29 Apr 2023 07:22 PM
Last Updated : 29 Apr 2023 07:22 PM

தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர்: மே 4-ல் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம்

தயாராகும் கும்பகோணம் தேர்

கும்பகோணம்: தமிழகத்திலேயே 3-வது பெரிய தேரான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது.

கும்பகோணம் சாரங்கபாணி கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாகவும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாக விளங்குவதாகும். ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் 4-ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதை யொட்டி தேருக்கான பராமரிப்பு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலேயே 3-வது பெரிய தேரான இந்தத் தேர், அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 400 டன் எடையிலுள்ளது. இந்தத் தேரின் 4 சக்கரங்கள் 9 அடி உயரமும், அதே அளவு விட்டமும் கொண்ட இரும்பினாலான அமைக்கப்பட்டுள்ளது. தேரின் முன்பகுதியிலுள்ள 2 குதிரைகள் 22 அடி நீளமும், 5 அடி அகலத்தில், 10 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. புகழ்பெற்ற இந்தத் தேரோட்டத்துக்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வரும் 4-ம் தேதி விமர்சையாக தேரோட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேரோட்டம் பணியாளர்கள் கூறும்போது, "திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்ததாக 3-வது பெரிய தேரான இந்தத் தேரில் பெருமாளின் வரலாறு, தசாவதாரம், 108 வைணவ பெருமாள்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வைணவ விக்கிரஹங்களும் இந்த தேரில் மரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4-ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, தற்போது தேருக்கான முட்டுக்கட்டை, இரும்பினாலான சக்கரத்தைச் சீர் செய்வது, தேரின் மேல் மரக்கம்புகளைக் கட்டுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மே 3-ம் தேதிக்கு முன் தேரை அழகுபடுத்தி, 4-ம் தேதி தேரோட்டம் விமர்சையாக நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x