Published : 06 Apr 2023 06:31 AM
Last Updated : 06 Apr 2023 06:31 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவை: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த்திருவிழா மார்ச் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இவ்விழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப் பல்லக்கில் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து, ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன் மண்டபத்தை சேர்ந்தார். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர சேர்த்தி மண்டபத்துக்கு வந்தார்.

தாயார் சன்னதி மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரங்கநாச்சியார் பகல் 2 மணிக்குப் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு பிற்பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

பின்னர், சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி இரவு 10.30 மணிக்கு தாயார் சன்னதியை சென்றடைந்தார். இரவு 12 மணி முதல் இன்று(ஏப்.6) அதிகாலை 3.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு இன்று அதிகாலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விடிய விடிய தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் இன்று காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது. இன்று இரவு சப்தாவரணம், நாளை(ஏப்.7) இரவு ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x