Published : 08 Mar 2023 06:32 AM
Last Updated : 08 Mar 2023 06:32 AM

சதுரங்கப்பட்டினத்தில் தீர்த்தவாரி உற்சவம்; கடற்கரையில் எழுந்தருளிய உற்சவர்கள்: பக்தர்கள் சுவாமி தரிசனம்

மாசிமகத்தையொட்டி சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் சுற்றுப்புற கோயில்களின் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

கல்பாக்கம்/ மாமல்லபுரம்: சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் மாசிமகத்தையொட்டி சுற்றுப்புற கிராமக் கோயில்களில் இருந்து உற்சவர்கள் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் எழுந்தருளினர். பின்னர் கடலில் நீராடும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

மாசிமகத்தையொட்டி நேற்று தீர்த்தவாரி உற்சவம் சதுரங்கபட்டினத்தில் நடைபெற்றது. இதில், சதுரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள், ஆதிகேசவ பெருமாள், நகரியப்பகுதியில் உள்ள ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த உற்சவ மூர்த்திகள் பல்வேறு மலர் அலங்காரத்துடன் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனமும் மற்றும்  அஸ்தராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அஸ்தராஜர் கடலில் இறங்கி நீராடினார். அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு கடலில் இறங்கி புனித நீராடினர்.

வராகப் பெருமாள் கோயில்: மாமல்லபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள வராகப் பெருமாள் கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு நேற்று கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் கருட வாகனத்தின் மீது வராகப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், ராஜவீதிகளின் வழியாக வீதியுலாவாக சென்று கடற்கரையை வந்தடைந்தார். அங்கு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், தீர்த்தவாரி உற்சவமாக வங்கக் கடலில் சக்கரத்தாழ்வார் இறங்கினார். அப்போது, பக்தர்களும் கடலில் புனித நீராடினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x