Published : 03 Oct 2022 04:07 AM
Last Updated : 03 Oct 2022 04:07 AM

நவராத்திரியின் உண்மையான சாரம்!

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

தேவி காளையை அடக்கி அழித்த கதை நமக்குத் தெரியும். இங்கு காளை தும்ரலோசனைக் குறிக்கிறது (மகிஷாசுரனின் சோம்பல் மற்றும் குறுகிய மனப்பான்மையால் கண்மூடித்தனமாக இருப்பவன்). பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் ஆகியோரின் கூட்டு ஆற்றலுடன் தெய்வீக அன்னை மட்டுமே இதனை அழிக்க முடியும். ஒரு குழந்தை பிறப்பதற்கு ஒன்பது மாதங்கள் ஆவதைப் போல, தேவி ஒன்பது நாட்கள் ஓய்வெடுத்து பத்தாம் நாளில் பிறந்தது தான் தூய்மையான அன்பும் பக்தியும். இதன்மூலம் தேவி செயலற்ற தன்மை மற்றும் மந்தமான காளையை வெற்றி காண்கிறாள்.

நவராத்திரி என்பது சுய-அலசலுக்கான நேரம். மனதை மீண்டும் மூலத்திற்கு கொண்டு வருவதும் ஆகும். நுட்பமான படைப்பை நிர்வகிக்கும் 64 தெய்வீக தூண்டுதல்கள் உள்ளன. பூமிக்குரிய மற்றும் ஆன்மீக நன்மைகள் அனைத்தையும் மீட்டெடுப்பதற்கு இவை பொறுப்புடையவை ஆகும். உண்மையில் அது ஒருவரின் விழிப்புணர்வின் ஒரு பகுதியாகும். இந்த ஒன்பது இரவுகள் அந்த தெய்வீக தூண்டுதல்களை மீண்டும் தட்டியெழுப்பவும், நம் வாழ்வின் ஆழத்தை அனுபவிக்கவும் கொண்டாடப்படுகின்றன.

மூலத்திற்கு எவ்வாறு திரும்புவது? உண்ணா நோன்பு, பிரார்த்தனை, மௌனம் மற்றும் தியானம் ஆகியவற்றின் மூலம் உண்மையான மூலத்திற்குத் திரும்ப முடியும். உண்ணாவிரதம் உடலை சுத்தப்படுத்துகிறது மற்றும் நச்சுகளை நீக்குகிறது. உங்கள் செரிமானஉறுப்புகளுக்கு சிறிது ஓய்வு அளிக்கிறது. மௌனம் பேச்சைத் தூய்மைப்படுத்துகிறது மற்றும் எப்போதும் சலசலத்துக் கொண்டே இருக்கும் மனதிற்கு ஓய்வு அளிக்கிறது. மேலும், தியானம் ஒருவரை அவரது உள்ளத்தின் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இந்த ஒன்பது நாட்களில் பிரபஞ்சத்தை உருவாக்கும் மூன்று ஆதி குணங்களையும் நாம் அனுபவிக்கிறோம். நம் வாழ்க்கை மூன்று குணங்களால் நிர்வகிக்கப்படுகிறது என்றாலும், அவற்றை நாம் அரிதாகவே அடையாளம் கண்டு சிந்திக்கிறோம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் தமோ குணமும், அடுத்த மூன்று நாட்கள் ரஜோ குணமும், கடைசி மூன்று நாட்கள் சத்வ குணமும் ஆகும். நமது உணர்வு தமோ மற்றும் ரஜோ குணங்களின் வழியாக பயணித்து இறுதி மூன்று நாட்களில் சத்வ குணத்தில் மலருகிறது. வாழ்க்கையில் சத்வ குணம் ஆதிக்கம் செலுத்தும் போதெல்லாம்,வெற்றி பின்தொடர்கிறது.

பத்தாம் நாளை விஜயதசமியாகக் கொண்டாடுவதன் மூலம் இந்த ஞானச் செய்தியின் சாராம்சம் போற்றப்படுகிறது. விநாயகருக்கு அர்ச்சனை செய்வதோடு விழா நிகழ்வுகள் துவங்குகின்றன. பின்னர் நாம் வாழ்க்கையின் பல்வேறு துறைகளைப் பாதிக்கும் ஒன்பது கிரகங்களைப் போற்றி நவகிரஹ ஹோமத்தை நடத்துகிறோம். இது எதிர்மறை கிரக பலன்களை நீக்குகிறது. இறைவனை நோக்கிச் செய்யப்படும் சுதர்சன ஹோமம் அறியாமையை நீக்கி, அறிவால் செழுமையடைந்த புதிய வாழ்வின் ஒளியைத் தரும். பக்தர்கள் இன்னல்களுக்கு ஆளாகும்போது, சுதர்சனப் பெருமான் தனது உக்கிரமான உருவத்தைக் கலைத்து பக்தர்களைக் காப்பதாகப் புராணம் கூறுகிறது.

நவராத்திரியின் அனைத்து ஹோமங்களின் உச்சத்தை அஷ்டமி நாள் குறிக்கிறது. சண்டி ஹோமம், உள் வாழ்க்கை மற்றும் பொருள் உலக வாழ்வில் ஏற்படும் வளர்ச்சியில் உள்ள தடைகளை நீக்குவதற்காக செய்யப்படுகிறது. துர்கா தேவியை வணங்கி 700 ஸ்லோகங்கள் பாடப்படுகின்றன.

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் பாராயணம் செய்வதன் மூலம், யாகத் தீயில் 108 காணிக்கைகள்செலுத்தப்பட்டு, துர்க்கா தேவியின் அருளை வேண்டுகிறோம். சண்டி ஹோமம் என்பது படைப்பில் உள்ள தெய்வீகத்தை அங்கீகரிப்பதாகும். நவராத்திரியின் ஒன்பதாம் நாள் ரிஷி ஹோமத்தின் வடிவத்தில் கடந்த, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தின் குருமார்கள் மற்றும் ரிஷிகளைப் போற்றி வணங்குகிறோம். நமது ரிஷிகள் முழு நடைமுறைகளையும் அறிவு அமைப்புகளையும் நன்கு புரிந்தறிந்து கொண்டு பிரபஞ்சத்தை நுண்ணியத்துடன் இணைக்கிறார்கள், அங்கு வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் போற்றப்பட்டு அது யக்ஞம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஒன்பது நாட்களிலும் பல யக்ஞங்கள் நடத்தப்படுகின்றன. செய்யப்படும் அனைத்து பூஜைகள் மற்றும் சடங்குகளின்அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றாலும், நாம் நம் இதயத்தையும் மனதையும் திறந்து அமர்ந்து வளிமண்டலத்தில்உருவாகும் அதிர்வுகளை உணர வேண்டும். அனைத்து சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் மந்திர உச்சாடனம் செய்வது மெய்யுணர்வின் தூய்மை மற்றும் மேம்பாட்டை எடுத்து வருகிறது.

முழுப் படைப்பும் உயிரோட்டமாகிறது, குழந்தைகள் எல்லாவற்றிலும் வாழ்க்கையைப் பார்ப்பது போல நாமும் எல்லாவற்றிலும் வாழ்க்கையை அங்கீகரிக்கிறோம். இந்த ஒன்பது இரவுகள் அல்லது நவராத்திரியின் போது, உங்கள் மனம் தெய்வீக உணர்வில் ஆழ்ந்திருக்கவேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன் ஒன்பது மாதங்கள் தாயின் வயிற்றில் இருப்பதைப் போல, இந்த ஒன்பது பகல் மற்றும் இரவுகளில், ஒருவர் உள்நோக்கிச் சென்று மூலத்தை நினைவில் கொள்ளவேண்டும்.

"நான் எப்படி பிறந்தேன்? என்னுடைய ஆதாரம் என்ன?" என்று இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் உணர்வைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்த ஒன்பது நாட்கள் நிகழும் கொண்டாட்டங்கள் ஒருவரை உள்நோக்கியும், மேல்நோக்கியும் கொண்டு செல்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x